நல்லா தின்னுதுங்க.. ஆனா முட்டைய காணோமே.. கோழிகள் பற்றி புகார்.. திணறிப் போன போலீஸ்!
கோழிகள் முட்டையிடவில்லை என்ற வினோதப் புகாரை விசாரித்து, சுமூகமாக பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளனர் புனே போலீசார்.
புனே: நன்றான தீவனம் சாப்பிட்டு விட்டு கோழிகள் முட்டையே போடவில்லை என கோழிப்பண்ணை உரிமையாளர் அளித்த வினோதப் புகாரால் போலீசார் திணறிப் போன சுவாரஸ்யமான சம்பவம் புனேயில் நடந்துள்ளது.
கிணற்றைக் காணோம்.. ஊரைக் காணோம்.. என வித்தியாசமான பல புகார்களை சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் சில சமயங்களில் கற்பனையையே மிஞ்சி விடுகின்றன சில புகார்கள். புனேவில் நடந்த சம்பவமும் அப்படிப்பட்டவைகளில் ஒன்று தான்.
ஸ்டெர்லைட் ஆலை அன்று என்னை கிழித்து குதறினீர்களே... இனி ஷட் அப் பண்ணுங்க - குஷ்பு ட்வீட்
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகிலுள்ளது லோன்-கல்போர் என்ற இடம். இங்கு ஏராளமான கோழிப்பண்ணைகள் இருக்கின்றன. இறைச்சி மற்றும் முட்டைக்காக கோழிகளை வளர்ப்பது தான் இப்பகுதியின் முக்கியத் தொழில்களில் ஒன்று.
வினோதமான புகார்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வரும் சுக்ராம்மானே என்பவர் போலீசில் சென்று விநோதமான புகார் அளித்தார். அதாவது, 'தனது பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நல்ல தீவனம் அளித்து வரும் போதும், அவை முட்டைப் போடுவதை நிறுத்தி விட்டதாக' கவலையுடன் தனது புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
அதிர்ச்சியும், ஆச்சர்யமும்
கோழிப் பண்ணை உரிமையாளரின் இந்தப் புகாரைக் கேட்டு அப்பகுதி போலீசார் முதலில் திகைத்துப் போய் விட்டனர். கோழி முட்டை போடாததையெல்லாம் எப்படி விசாரிக்க முடியும் என குழம்பிப் போயினர். ஆனாலும் இது குறித்து அவர்கள் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையில் மட்டுமல்ல, மற்ற சில பண்ணைகளிலும் உள்ள கோழிகள் சமீபகாலமாக முட்டைப் போடுவதை நிறுத்தி விட்டதை தெரிந்து அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர்.
தீவனம் தான் காரணம்
கோழிகள் திடீரென முட்டைப் போடுவதை நிறுத்தியதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என அவர்கள் அனைத்து உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது தான், முட்டை போடுவதை கோழிகள் நிறுத்தியதன் பின்னணியில் ஒரு ஒற்றுமை இருப்பது தெரிய வந்தது. அதாவது அந்த உரிமையாளர்கள் அனைவரும் சமீபத்தில் தங்களது கோழிகளுக்கு புதிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து தீவனம் வாங்கி இருக்கிறார்கள்.
புதிய கோழித் தீவனம்
வழக்கமாக அவர்கள் புனேவிலில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றிடமிருந்து கோழித்தீவனம் வாங்குவது தான் வழக்கமாம். ஆனால் அந்த நிறுவனம் தனது கோழித்தீவனத்தின் விலையை கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து அகமத் நகர் பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நிறுவனத்திடமிருந்து புதிதாக கோழித்தீவனம் வாங்க ஆரம்பித்துள்ளனர். புதிய கம்பெனியில் வாங்கிய கோழித்தீவனத்தை சாப்பிட்ட பிறகுதான் கோழிகள் முட்டையிடுவதை நிறுத்தியுள்ளன.
இழப்பீடு
இதையடுத்து சம்பந்தப்பட்ட கோழித் தீவன தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகளை அழைத்து போலீசார் பேசியுள்ளனர். அவர்களும் இதே போன்ற பிரச்சினையை வேறு சில வாடிக்கையாளர்களும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் பிரச்சினையை பெரிது படுத்த விரும்பாத சம்பந்தப்பட்ட கோழித் தீவன தயாரிப்பு நிறுவனம், பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. எனவே இந்தப் புகாரை வழக்காகப் பதிவு செய்யாமல் போலீஸார் பேச்சுவார்த்தை மூலம் முடித்து வைத்து விட்டனர்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
இது குறித்து சீனியர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர மொகாசி கூறுகையில், "இந்தப் புகார் குறித்து நாங்கள் கால்நடைத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தோம். சில குறிப்பிட்ட உணவு கோழிகளுக்கு ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்ட நேரத்தில் கோழிகள் முட்டையிடுவதை நிறுத்திவிடுவது வழக்கம் என்று தெரிவித்தனர். இதற்கு முன்பும் இது போன்று புதிய தீவனத்தைக் கொடுத்தவுடன் கோழிகள் முட்டையிடுவதை நிறுத்திய சம்பவங்கள் நடந்துள்ளன.
சோதனை
எனவே, மீண்டும் பழைய தீவனத்தை அந்தக் கோழிகளுக்குக் கொடுத்துப் பார்த்தோம். மீண்டும் பழைய படி, கோழிகள் முட்டையிட தொடங்கின. அதன் மூலம் புதிய தீவனத்தில் தான் தவறு என்பது தெரிய வந்தது. பண்ணை உரிமையாளர்களிடமிருந்து தங்களது தீவனத்தை வாங்கிக்கொண்டு, ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு கொடுப்பதாக சம்பந்தப்பட்ட தீவன நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.