இதே தான் வேலையா உங்களுக்கு? ஓபிஎஸ்-இபிஸ் மோதலால் கடுப்பான ‘சவுத்’! கொதித்தெழும் முக்குலத்தோர்!
இராமநாதபுரம் : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் தேவர் தங்க கவசத்தை பெறுவது யார் என்ற மோதலுக்கு அதிமுகவில் முடிவு எட்டப்படாத நிலையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர் அதிமுக நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அரசே தேவரின் தங்க கவசத்தை அரசுடைமை ஆக்கி வருடா வருடம் அணிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா அவரது பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பல்வேறு சமுதாய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தேவர் ஜெயந்தி விழா
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளும் நினைவு நாளும் ஒரே நாள் என்பதோடு, ஒரு தலைவர் என்பதைவிட பலரும் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து திருவிழா போலவே தேவரை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசத்தை வழங்கினார். இதனால் அதிமுகவுக்கு முக்குலத்தோர் செல்வாக்கு அதிகரித்த நிலையில் இந்த தங்க கவசமானது மதுரை பேங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

தங்க கவசம்
தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுக பொருளாளராக யார் இருக்கிறார்களோ அவர்கள் வங்கியில் கையெழுத்திட்டு தேவர் விழா குழுவினர் இடம் ஒப்படைக்க வேண்டும். விழா முடிந்த பின் மீண்டும் தங்க கவசத்தை பெற்று வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் என அப்போதே ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் தான் அதிமுகவில் பொருளாளர் தொடர்பான மோதல் யார் என்பது நீடித்து வருகிறது. எடப்பாடி தரப்பில் திண்டுக்கல் சீனிவாசனம் மறுபுறம் ஓ பன்னீர்செல்வம் தாங்கள்தான் அதிமுகவின் பொருளாளர் எனவும் தங்கள் தரப்பிலேயே தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டுமென போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

மீண்டும் சிக்கல்
தேவரின் தங்க கவசத்தை தங்கள் தரப்புக்கே வழங்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு நேரில் சென்றும் கடிதம் மூலமும் இரு தரப்பும் நெருக்கடி அளித்து வரும் நிலையில் இது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதிமுகவில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே போல பிரச்சினை இருந்தபோது தேவரின் குருபூஜை விழாவும் வந்து சேர்ந்தது. அப்போதும் அதிமுகவில் இரு தரப்பாக இருந்ததால் அரசு அதிகாரிகளை தேவரின் தங்க கவசத்தை விழா குழுவினரிடம் வழங்கினர். இதனால் மீண்டும் அதே போல் நடவடிக்கை எடுக்கப்படுலாம்? எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

முக்குலத்தோர் சமுதாயத்தினர்
இந்நிலையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர் அதிமுக நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அரசே தேவரின் தங்க கவசத்தை அரசுடைமை ஆக்கி வருடா வருடம் அணிவிக்க வேண்டும் என எனக் கோரிக்கை எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசம் வழங்கியபோது நாங்கள் அதை எதிர்த்தோம் காரணம் மற்ற நாட்களை பல கிலோமீட்டர் பயணம் செய்து வரும் முக்குலத்தோர் சமூகத்தினர் குருபூஜையின் போது தங்க கவசம் அணிவிக்கப்படுவதால் பலரால் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் தேவரை தரிசனம் செய்ய முடிவதில்லை.

திடீர் கோரிக்கை
எனவே பாதுகாப்பு கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் என்றால் தங்க கவசம் வேண்டாம் என அப்போதே சில முக்குலத்தோர் அமைப்புகள் கூறின. ஆனாலும் முன்னாள் முதல்வர் ஜெயலிதா அவர்களின் மனத் திருப்திக்காக நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டோம். ஆனால் அதை வைத்து தற்போது அதிமுகவில் அரசியல் செய்வது தேவரை அவமதிப்பது போல இருக்கிறது. கடந்த முறை போல மாவட்ட ஆட்சியர் அல்லது தமிழக அரசு இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு ஒரு சுமூக முடிவெடுக்க வேண்டும் என்கின்றனர். மேலும் தேவரின் தங்க கவசத்தை அரசுடைமை ஆக்கி, நிதியமைச்சர் கையெழுத்திட்டு வருடா வருடம் அணிவிக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications