மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணி எப்போது தொடங்கும்? மா.சுப்ரமணியன் சொன்னது இதுதான்!
ராமநாதபுரம்:எய்ம்ஸ் மருத்துவமனை அமைய திட்ட மதிப்பீடு ரூ.1,977 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 82 சதவீதம் நிதியான ரூ.1,627 கோடி ஜப்பான் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் பெறப்படும். எஞ்சிய 18 சதவீதம் ஒன்றிய அரசு மூலம் பெறப்பட்டு அடுத்த சில மாதங்களில் கட்டிட பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video
தென் தமிழக மக்கள் பயனடையும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மக்கள் நீண்டகாலமாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார்.
மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகியும் ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஒரே ஒரு செங்கலை வைத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறி தேர்தல் பிரச்சாரம் செய்தார் உதயநிதி. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கடன் ஒப்பந்தம்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி ஒன்றரை வருடங்கள் கழித்து ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் கையெழுத்தான பின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க அரசு, எய்ம்ஸுக்கான இடத்தை ஒப்படைக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எப்போது தொடங்கும்
லோக்சபாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமாவளவன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும்வரை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் பற்றி முழு விவரங்களை தரும்படி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ஒன்றிய அரசிடம் கேட்டு இருந்தார். சு.வெங்கடேசன் விவரங்கள் கேட்ட நிலையில் ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த மே மாதம் தெரிவித்தது.

அமைச்சர் மா.சுப்ரமணியன்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய நேரத்தில் கட்டுமான பணி தொடங்காமல் 3 ஆண்டு தாமதம் செய்ததால் ரூ.713.80 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2019ம் ஆண்டு ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய திட்ட மதிப்பீடு ரூ.1,977 கோடியாக அதிகரித்துள்ளது.

எப்போது பணி தொடங்கும்
இதில் 82 சதவீதம் நிதியான ரூ.1,627 கோடி ஜப்பான் ஜைய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் பெறப்படும். எஞ்சிய 18 சதவீதம் ஒன்றிய அரசு மூலம் பெறப்பட்டு அடுத்த சில மாதங்களில் கட்டிட பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய நேரத்தில் கட்டுமான பணி தொடங்காமல் 3 ஆண்டு தாமதத்தால் ரூ.713.80 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications