கட்சி சிதறி கிடக்கிறது, நாங்கள் பதறி கிடக்கிறோம்! அடடே இவரா? பரபர பாலிடிக்ஸ்க்குள் வந்த அன்வர் ராஜா!
ராமநாதபுரம் : அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாள் வருகிற 24-ஆம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜா இராமநாதபுரத்தில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கியதாக கடந்த சில மாதங்களாகவே அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டு வந்தனர்.
அதற்கு முன்னதாக சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்த நிலையில் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்ட பலரும் கட்சியை விட்டு துரத்தி அடிக்கப்பட்டனர். அந்த வகையில் பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் அடங்குவர்.

அன்வர் ராஜா
குறிப்பாக அதிமுகவில் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா. இவர் தீவிர ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தார். அதன்பிறகு எடப்பாடி -ஓபிஎஸ் உடன் பயணித்தாலும் சசிகலாவின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். எடப்பாடி -ஓபிஎஸ் ஒன்றாக இருந்த போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்ததாகவும், அவரை சக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கட்டுப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது.

எடப்பாடியுடன் மோதல்
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை அவர் கூறி வந்த நிலையில், அதற்கு முன்னர் ஊடகங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை கட்சி நிர்வாகிகள் பயன்படுத்தாமல் பிரச்சாரம் மேற்கொண்டது தோல்விக்கு காரணம் எனவும், தற்போதைய கட்சித்தலைமை வலுஇல்லாமல் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூறியதால் அவர் மீது சிவி சண்முகம் கோபமடைந்தார்.

கட்சியிலிருந்து நீக்கம்
அதற்கு பின்னதாக எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா விமர்சிக்கும் வகையில் ஒரு ஆடியோ ரிலீஸாகி பரபரப்பைக் கிளப்பியது. அதில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைத் தக்க வைத்திருந்தார் எடப்பாடி தன்னை புரட்சித் தலைவர் என்றே சொல்லியிருப்பார் என விமர்சனம் செய்திருந்தார். இதில் அவர் எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசிவிட்டதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து கட்சியின் செயற்குழுவுக்கு முன்னதாக அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவித்தனர்.

போஸ்டர்
அதன் பின்னர் அரசியல் நிகழ்வுகளில் தலைகாட்டாமல் இருந்த அன்வர் ராஜா தற்போது மீண்டும் லைம் லைட் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாள் வருகிற 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

கட்சி சிதறி கிடக்கிறது
அந்த சுவரொட்டியில் "தலைவா,ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறி கிடக்கிறது, நாங்கள் பதறி துடிக்கின்றோம் காப்பாற்றுங்கள்" என்று எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுவரொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சசிகலா ஆதரவு நிர்வாகிகள் ஒவ்வொருவராக அதிமுக குறித்தும், சசிகலா தீவிர அரசியலுக்கு வர வேண்டுமென கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது அன்வர் ராஜாவும் போஸ்டர் அரசியலைக் கையிலெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications