கம்போடியாவில் ஆபாச சாட்டிங் கும்பலிடம் சிக்கிய தமிழர்கள்.. தப்பி வந்த இளைஞர் அதிர்ச்சி தகவல்
ராமநாதபுரம்: கம்போடியாவில் ஆபாச சாட்டிங் கும்பலிடம் தமிழக இளைஞர்கள் சிக்கித் தவிப்பதாக ராமநாதபுரத்திற்கு வந்த இளைஞர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் ரூபாய் நோட்டுகளை பறிக்க கஷ்டப்பட்டு ஏமாற்றுவர். ஆனால் இன்றோ உட்கார்ந்த இடத்தில் இருந்து மோசடிக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள். ஹைடெக்காக பணத்தை கறப்போரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
வீடியோ கால் போட்டு அதில் நிர்வாணமாக நின்றுக் கொள்ளுதல், போனில் வீடியோ காலை எதிராளி ஆன் செய்தவுடன் ரெக்கார்டிங் செய்யப்பட்டுவிடும். இதை வைத்து மிரட்டி பணம் பறித்தலும் நடக்கிறது.
இந்தியா
இது இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இந்த ஹைடெக் மோசடிகள் நடக்கின்றன. அது மசாஜ் என விளம்பரத்தை குறிப்பிட்ட முகவரிக்கு நம்பி செல்லும் நபர்களிடம் இருந்து மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு துரத்தி விடுகிறார்கள். தான் மசாஜ் சென்டருக்கு போனதால் பணம் பறிபோனதாக யாரும் புகார் கொடுக்க சங்கடப்படுவார்கள் என்பதால் இப்படி ஒரு ஏமாற்று சம்பவம் நடக்கிறது.
கம்போடியா
இந்த நிலையில் கம்போடியாவில் ஒரு கும்பலிடம் சிக்கி அழகி போல் பேசி நடிக்கும் வேலை செய்து வந்த ஒருவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி தமிழகம் வந்துள்ளார். ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் அந்த கும்பலிடம் சிக்கியிருப்பதாக அதிர்ச்சியான ஒரு தகவலையும் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் இளைஞர்
ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் நீதிராஜன் (28). டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ள இவர் வேலையில்லாமல் அவதிப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவருக்கு கம்போடியா நாட்டில் அதிக ஊதியத்திற்கு கம்ப்யூட்டர் தொடர்பான வேலை வாங்கி தருவதாக கொழுந்தூரை சேர்ந்த மகாதீர் முகமது கூறியுள்ளார்.
ரூ 2.50 லட்சம்
இதை நம்பிய நீதிராஜன், அவர் கேட்டது போல் ரூ 2.50 லட்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து நீதிராஜனை மகாதீர் சுற்றுலா விசாவில் கடந்த ஜூன் மாதம் கம்போடியாவுக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு நீதிராஜனுக்கு கம்ப்யூட்டர் வேலை வாங்கித் தரவில்லை. அதற்கு பதிலாக சீன நாட்டு நிறுவனத்திடம் நீதிராஜனை 3 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார்.
பெண் குரலில் பேசி மயக்கும் பணி
அமெரிக்காவை சேர்ந்த ஆண்களிடம் போனில் பெண் குரலில் பேசி அவர்களை மயக்கி பணம் செலுத்த வைப்பதே அந்த கம்பெனியின் பணியாகும். இதற்கு நீதிராஜன் மறுத்துள்ளார். இதனால் அவரை அறையில் அடைத்து வைத்து உணவு வழங்காமல் உடலில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தார்களாம். இதனால் வேறு வழியின்றி அந்த நிறுவனம் சொன்னது போல் மாடல் அழகி போல் பேசி அமெரிக்க இளைஞர்களை மயக்கியுள்ளார்.
தப்பிய நீதிராஜன்
எனினும் எப்படியாவது ஊருக்கு தப்ப வேண்டும் என நினைத்துள்ளார். அதன்படி கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தை நாடியுள்ளார். அவர்களின் மூலம் நீதிராஜன் கம்போடியாவிலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மோசடி குறித்து மகாதீர் மற்றும் அவரது தாய் மீது ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை போல் சுமார் 1500 தமிழக இளைஞர்கள் அந்த கும்பலிடம் சிக்கியுள்ளார். அவர்கள் தினமும் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வருகிறார்கள். எனவே அவர்களை மீட்க வேண்டும் என்றும் நீதிராஜன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.