தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ராமநாதபுரம் ஆசிரியர் தேர்வு.. யார் இந்த ராமச்சந்திரன்? முழுவிபரம்
ராமநாதபுரம்: 2022ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஓர் ஆசிரியராக ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி கற்க சொந்த செலவில் செல்போன்கள் வாங்கி கொடுத்து உதவி செய்தது உள்பட மாணவர்களின் தனித்திறனை கொண்டு வர யூடியூப் பக்கம் தொடங்கி அசத்திய நிலையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியரான இவரது பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளில் நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மேலும் 3 பேர் அரெஸ்ட் - கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் இருந்து 6 பேர் பரிந்துரை
அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியான ஆசிரியர்களை ஒவ்வொரு மாநில அரசும் பரிந்துரை செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறையின் தேர்வுக்குழு பரிந்துரை செய்தது. இவர்களுக்கான நேர்காணல் தேர்வு, தேசிய அளவில் தனி நடுவரின் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
ராமநாதபுரம் ஆசிரியர் ராமச்சந்திரன் தேர்வு
இதையடுத்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் இன்று வெளியானது. அதன்படி நாட்டில் மொத்தம் 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தேர்வாகி உள்ளார். அதாவது 2022ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் கே.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கு செல்போன்
கொரோனா காலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் விளிம்புநிலை குழந்தைகளின் கல்வி தடைப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இணைய வழி கல்வி கிடைக்கும் வகையில் தனது சொந்த செலவில் செல்போன்கள் வாங்கி கொடுத்து உதவி செய்தார். மேலும் கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்குப் பயிற்சி வழங்கி வருகிறார். இதன்மூலம் கிராமத்து இளைஞர்களை அரசு ஊழியர்களாக்க முயற்சியை முன்னெடுத்து வருகிறார்.
தொடக்கப் பள்ளிக்கு தனி யூடியூப் பக்கம்
மேலும் students skills என்ற பெயரில் யூடியூபில் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எனத் தனியாக கணக்கு தொடங்கி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வருகிறார். அதோடு தமிழர்களின் தொன்மையும் பெருமையுமான திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் விதைத்து வருகிறார். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறளைக் கற்றுக் கொடுத்து, குறள்களை ஒப்புவிக்க வைக்கிறார். அதேபோல அரசின் திட்டங்களான எண்ணும் எழுத்தும் உள்ளிட்டவற்றையும் சிறப்புற கற்பித்து, யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
விருது வழங்கும் ஜனாதிபதி
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் (அறிவியல் மாளிகை) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஜனாதிபதி விருது வழங்குவார். அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருது வழங்க உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூ. 50,000-க்கான காசோலை ஆகியவை வழங்கப்படும் என மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது.
குறையும் தமிழகப் பிரதிநிதித்துவம்
இந்த ஆண்டு ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருந்தாலும் கூட விருதுக்கான தமிழகத்தின் பிரதிநிதித்துவம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. 2020ஆம் ஆண்டு ஆசிரியர்கள் சரஸ்வதி, திலிப் ஆகியோர் விருது பெற்றனர். 2021ல் ஆசிரியர்கள் ஆஷா தேவி மற்றும் லலிதா ஆகியோர் விருது பெற்ற நிலையில் 2022ல் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ராமச்சந்திரன் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.