30 வருட பாரம்பரியம்.. கழிவறையில் தயாரிக்கப்பட்ட சமோசா! எலி ஷவர்மா.. அதிர்ச்சியில் உறைந்த கஸ்டமர்கள்!
ரியாத் : சவூதி அரேபியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவறைகளில் சமோசா மற்றும் இதர தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்ததை கண்டறிந்ததை அடுத்து, ஜித்தா நகரில் உள்ள ஒரு உணவகத்தை அதிகாரிகள் சமீபத்தில் மூடியுள்ளனர்.
மழை பெய்யும் போதும், மாலை நேரங்களிலும் நம் மனம் எதை நாடுகிறதோ இல்லையோ சூடான டீயையும், அதைவிட சூடான சுவையான சமோசாவையும் தான் தேடும். வெறும் டீ மட்டும் டீ பிரியர்களை திருப்தி படுத்தி விடாது.
பல கிலோ மீட்டர் பயணம் செய்து கூட சுவையான தின்பண்டங்களை சாப்பிடும் பழக்கமும் பலருக்கு ஆர்வம் அதிகம், ட்ராவல் vlog என ஆரம்பித்து ஊர் ஊராய் போர் தெரு தெருவாய் சுற்றி சாப்பிட்டு அதனை வீடியோ போட்டு கல்லா கட்டும் யூட்யூபர்களும் அதிகரித்துள்ளனர்.
சவுதி அரேபியா அதிர்ச்சி
அந்த வகையில் சமூக வலைதளங்களில் பேமஸான ஒரு உணவகம் தான் தற்போது கடும் சிக்கலில் சிக்கியுள்ளது. சவுதி அரேபியாவின் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மிகவும் புகழ்பெற்ற உணவகத்தில் பின்பற்றப்பட்ட பயங்கரமான உணவு தயாரிப்பு முறை பற்றிய ஒரு ரகசிய தகவலை அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து ஜெட்டா நகராட்சி பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள உணவகத்தில் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
கழிவறையில் சமோசா
அப்போது அங்கு சமோசா, ஷவர்மா உள்ளிட்ட உணவு பண்டங்கள் தயாரிக்கப்படும் முறையை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். காரணம் அந்த உணவகம் கழிவறைகளில் சிற்றுண்டிகள் மற்றும் உணவைத் தயாரித்துள்ளது. கூடுதலாக,உணவகத்தில் இறைச்சி மற்றும் சீஸ் போன்ற காலாவதியான உணவுப் பொருட்களைப் பயன்படுத்தியதை ஜித்தா நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர். அவற்றில் சில பொருட்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை.
பூச்சி, எலிகள்
கழிவறையும் சட்டி மட்டுமல்ல அதனை சுற்றி பூச்சிகள் மற்றும் எலிகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள், 30 வருடம் பழமையான உணவகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுகாதாரம் இல்லாமலும், சட்டத்தை மீறி உணவு தயாரிக்கப்பட்டதையும் உறுதி செய்த நிலையில், தற்போது அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.
உணவகம் மூடல்
இதற்கிடையில், சுகாதாரமற்ற சூழ்நிலைக்காக சவுதி அரேபியாவில் உணவகம் மூடப்படுவது இது முதல் முறையல்ல. இது குறித்து கல்ஃப் நியுஸ் வெளியிட்ட தகவல்களின் படி, ஜனவரி மாதம், ஜெட்டாவில் உள்ள ஒரு பிரபலமான ஷவர்மா உணவகத்தில் எலி சுற்றித் திரிவதும், அது காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மேல் ஏறி இறைச்சி சாப்பிடும் வீடியோவால் அந்த உணவகம் மூடப்பட்டது. உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவகம் மீது அதிகாரிகள் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.