முதல் கையெழுத்து நீட் ரத்துன்னு சொன்னாரே ஸ்டாலின்... என்னாச்சு அறிவிப்பு வரலையே - இபிஎஸ்
தேர்தல் நேரத்தில் திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை அளித்து ஆட்சியை பிடித்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம்: சட்டசபை தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த மு.க ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக முதல் கையெழுத்து போடுவதாக சொன்னாரே அது என்னாச்சு என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கடந்துள்ள நிலையில் எதிர்கட்சியாக உள்ள அதிமுக இன்று திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய திமுகவை எதிர்த்து அதிமுக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள தனது வீட்டின் முன்பு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

வாக்குறுதிகள்
திமுக தேர்தல் நேரத்தில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. அதில் முக்கியமானவற்றை கூட நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறிவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் கையெழுத்து போடுவதாக சொன்ன ஸ்டாலின் கண்துடைப்புக்காக ஒரு கமிஷன் அமைத்து விட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ரத்து
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார். ஆனால் அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மாணவர்களையும் பெற்றோரையும் தொடர்ந்து குழப்பி வருகிறது. சட்டப்பேரவையில் இதுகுறித்து கேட்டதற்கு மழுப்பலான பதிலே கிடைத்தது. அப்போது தெரிவித்திருந்தால் கூட மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக இருப்பார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அறிவித்தார்கள், மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாக கூறினார்கள் எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் கவனத்தை திசை திருப்பவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போட்டு வருகிறார்கள் இது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

மின்வெட்டு
ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் திமுக அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால்தான் போராட்டம் நடத்தப்படுகிறது. அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். மின் கணக்கீட்டு முறையில் ஏகப்பட்ட குளறுபடி நடப்பதாக தமிழகம் முழுவதிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதனை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கடன் என்பது முதலீடுதான்
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் இருப்பதை மறந்துவிட்டு திமுகவினர் பேசக்கூடாது. அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிக்காகவே கடன் வாங்கப்படுகிறது. இதனை கடன் என்ற நோக்கில் பார்க்காமல் முதலீடாகவே பார்க்கவேண்டும் நூற்றுக்கு அறுபது சதவீத கடன்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து சாதியினருக்கும் உரிய முறையில் இட ஒதுக்கீடு கிடைக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications