எடப்பாடிக்கு செக் வைக்க சேலம் வரும் சசிகலா...தடபுடல் வரவேற்பு - அசரடிக்கும் போஸ்டர்கள்
ஆன்மீக சுற்றுப்பயணம் செல்லும் சசிகலாவை வரவேற்று சேலம் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சேலம்: சசிகலாவின் ஆன்மீக பயணம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று அதிமுகவின் நிர்வாகிகள் கூறி வந்தாலும் சேலத்தை நோக்கி கிளம்பியுள்ள சசிகலாவை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனவாம். சசிகலா வருவதற்கு முன்பே நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு செக் வைக்கும் வகையில் உள்ளதாக பேசிக்கொள்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.
சசிகலாவின் வாழ்க்கை பயணத்தை ஜெயலலிதாவிற்கு முன் ஜெயலலிதாவிற்கு பின் என்று பிரிக்கலாம். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் அவர்தான் நம்பர் 2. ஜெயலலிதாவின் நிழலாக கூடவே இருந்தார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் ஜெயலலிதாவிற்கு கொடுத்த மரியாதையை சசிகலாவிற்கும் கொடுத்தனர்.
ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு சின்னம்மா என்று நிர்வாகிகள் சசிகலாவை அழைத்தனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக்கொண்டார். எல்லாம் சில நாட்கள்தான். எல்லாம் சரியாக போய் கொண்டிருந்த நேரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு அவர் முதல்வராக ஆசைப்பட்டது நடக்கவில்லை.
ஓபிஎஸ் தலைமையில் சிலர் பிரிந்தனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. போவதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி ஆட்சியை ஒப்படைத்தார். டிடிவி தினகரனை துணைப்பொதுச்செயலாளராக அறிவித்து கட்சியை ஒப்படைத்தார். அதன் பின் இரண்டாக உடைந்த கட்சி இணைந்தது வேறு கதை. சசிகலாவையும் டிடிவி தினகரனையும் ஒதுக்கி வைத்து விட்டு ஓ.பன்னீர் செல்வத்துடன் கரம் கோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.
நான்காண்டு கால ஆட்சியையும் நடத்தி முடிக்கப் போகும் நேரத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா. அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாக கூறிய அவர், சில நாட்களில் அரசியலை விட்டு விலகப்போவதாக அறிக்கை வெளியிட்டார். பின்னர் ஆன்மீக பயணம் கிளம்பினார். சிலருடன் போனில் பேசினார். சசிகலாவுடன் தொடர்பில் இருந்தவர்களை கட்சியை விட்டு ஓபிஎஸ், இபிஎஸ் நீக்கினர்.

ஆன்மீக பயணம்
தென் மாவட்டங்களுக்கு ஆன்மீக பயணம் சென்ற சசிகலாவை பெரிய அளவில் யாரும் வரவேற்கவில்லை. சில நிர்வாகிகள் மட்டுமே சென்று சந்தித்தனர். ஓ.பன்னீர் செல்வம் தம்பி உட்பட சசிகலாவை சந்தித்த அனைவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். கோவில் கோவிலாக போன சசிகலாவிற்கு மிகப்பெரிய நிம்மதியே ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஓபிஎஸ் சொன்னதுதான்.

சேலம் பயணம்
தன்மீதான களங்கம் துடைக்கப்பட்டு விட்டதாகவே கருதும் சசிகலாவிற்கு மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களை இனி தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று நினைக்கிறார் சசிகலா. நாளை மறுநாள் ஏப்ரல் 11 தேதி சசிகலா சேலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இது ஆன்மீக சுற்றுப்பயணமாக தொடங்கினாலும், மற்றொருபுறம் முழுமையான அரசியல் பயணமாகவும் இருக்கும் என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

தடபுடல் வரவேற்பு
11ஆம் தேதி சங்ககிரி தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு வரும் சசிகலாவுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தாரை தப்பட்டை வாணவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்புக்கு தயாராகிவரும் சசிகலா ஆதரவாளர்களுக்கு இடையே சேலம் மாநகரில் அவரை வரவேற்று ஆங்காங்கே பெரிய அளவிலான போஸ்டர்கள் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எடப்பாடியை அப்செட் ஆக்கிய போஸ்டர்கள்
சேலம் மாவட்டத்தில் மேச்சேரி பத்ரகாளியம்மன், எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில்களில் வழிபடுகிறார். தொடர்ந்து அன்று இரவு சேலத்தில் தங்குகிறார். அப்போது தனது ஆதரவாளர்களை சந்திக்கிறார். சசிகலா வருகையை முன்னிட்டு மாநகர், மாவட்ட பகுதிகளில் அதிரடி விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், தங்க தாரகையே, தமிழகம் ஈன்றெடுத்த மூன்றாவது பெண் முதல்வரே, அன்பு காட்டும் தாய்மையே என்று போற்றி புகழ்ந்து ஒட்டப்பட்டுள்ளன. ஜெயலலிதா தனது கையால் சசிகலாவிற்கு கிரீடம் சூட்டுவது போலவும் செங்கோல் தருவது போலவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை அப்செட் ஆக்கியுள்ளது. பல போஸ்டர்களை கிழித்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

அதிமுகவினர் அதிர்ச்சி
சேலத்தில் சசிகலா ஆதரவாளர்கள் என இதுவரை யாரும் இல்லாத நிலையில் கலைவாணி என்ற பெயரில் ஆங்காங்கே போஸ்டர்கள் களைகட்டியுள்ளது. இந்த போஸ்டர்கள் உள்ள வரிகளும் வார்த்தைகளும் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போஸ்டர்கள் காணப்படுகின்றன. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை
சசிகலாவின் பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்று சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அது ஆன்மீக பயணம் என்றும் தெரிவித்தார். சேலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா சசிகலா பயணம் அல்லது ஆலய தரிசனத்தை மட்டும் முடித்து விட்டு திரும்புவாரா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications