ஒருமையில் பேசுறாங்க..! அடாவடி பண்றாங்க..! திமுக மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சேலம்: தமிழகத்தில் பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சியினருக்கு விருப்பமனு அளிக்கப்பட்டு வருகிறது. கட்சியின் நிர்வாகிகள் தங்கள் சொந்த ஊர்களில் விருப்பமனு விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர்.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்தில் கட்சியினருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விண்ணப்பங்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு மீதும் , அமைச்சர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக உணவு வினியோகம் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளதாகவும், மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க எந்தவித முன்னேற்பாடும் திமுக அரசு செய்யவில்லை எனவும், வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தகவல் தெரிவித்து வரும் நிலையில், அரசு முன்னேற்பாடுகளை செய்யாத காரணத்தால் ஆங்காங்கே மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது நிற்பதாக குற்றம்சாட்டினார்.

அம்மா உணவகம்
அம்மா உணவகம் மூலம் அதிமுக அரசு ஏழை எளியோர்க்கும் மலிவு விலையில் உணவு கிடைக்க நடவடிக்கை எடுத்த நிலையில் அதை முடக்க திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும், மக்களின் நன்மைக்காகவும் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டத்தை திமுக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

7 பேர் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 தமிழர் பேர் விடுதலை குறித்து கேள்வி கேட்பதற்கு திமுகவிற்கு எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறிய அவர், திமுக ஆட்சியில், கருணாநிதி தலைமையில். 7 பேர் விடுதலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு என்றார்.

அரசியல் நாடகம்
7 பேர் விடுதலையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் நாடகமாடி வருவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி , உண்மையிலே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பி இருந்தால் அமைச்சரவைக் கூட்டத்திலேயே முடிவு எடுத்திருக்கலாம், ஆனால் எடுக்கவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது நேர்மையான முறையில் ஆட்சி செய்ததாகவும், ஜனநாயக முறையில் எங்கள் அரசு செயல்பட்டது என்றார்.

ஒருமையில் பேசுகின்றனர்
திமுக அமைச்சர்கள் ஒருமையில் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர் என்றும், அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் அடாவடி செய்து வருகிறார் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications