மேல்முறையீடு செய்து வேதா நிலையம் மீட்கப்படும்.. கட்சியினரிடையே இபிஎஸ் உறுதி
சேலம் : ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியது செல்லாது என்று அறிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அதை நினைவு இல்லமாக மாற்றியதாக அவர் தெரிவித்தார்.
வேதா நிலையம் மீதான உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அதிமுகவின் நிலைப்பாடு என்ன?.. ஜெயக்குமார் விளக்கம்
ஜெயலலிதா இல்லம்
போயஸ் கார்டன் என்றால் முதலில் ஞாபகம் வருவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அடுத்தது அவர் வாழ்ந்த வேதா இல்லம். அதற்குக் காரணம் தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தது முதல் அரசியல் வாழ்க்கை வரை 44 ஆண்டுகாலம் அங்கே ஜெயலலிதா வாழ்ந்து மறைந்தார். இது ஜெயலலிதாவின் இல்லம் என்பதை விட அதிமுகவின் தலைமைக் கழகம் என்றே சொல்லலாம். அதற்குக் காரணம் அதிமுக தொடர்பான முக்கிய முடிவுகள் அனைத்தும் இங்குதான் எடுக்கப்படும். ஜெயலலிதா உடன் நட்பு ஏற்பட்ட பிறகு 25 ஆண்டுகளுக்கு மேலாக சசிகலா இந்த வீட்டில்தான் வாழ்ந்து வந்தார்.
ஜெ. நினைவு இல்லமாக்க நடவடிக்கை
2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற நிலையில் வேதா இல்லத்தில் தங்கியிருந்தவர்கள் காலி செய்து கொண்டு புறப்பட்டனர். இந்நிலையில் வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என 2017ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். பின்னர் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலம் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.
ஜெ.தீபா, ஜெ.தீபக் வழக்கு
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவருடைய சகோதரர் தீபக் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். அரசு ஆவணங்களின்படி 1967ம் ஆண்டு ஜூலை மாதம் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா தன்னுடைய பெயரில் வாங்கினார் என்றும் எனவே பாட்டியின் சொத்து பேரப்பிள்ளைகளுக்குத்தான் செல்லும் என்றும் வாதாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நினைவு இல்லத்தை திறக்க தடைவிதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. இதை அடுத்து அரசுடமையாக்கப்பட்ட வேதா நிலையத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
2 நினைவிடங்கள் எதற்கு?
இந்நிலையில் தனிநபர் சொத்துக்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை என்றும், வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் தீபா, தீபக் ஆகியோர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது.வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் ஜெயலலிதாவிற்கு எதற்காக 2 நினைவிடங்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.
தீர்ப்பு வேதனை அளிக்கிறது
இன்னிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வேதனை அளிப்பதாக பேட்டியளித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை பொதுமக்கள் பார்வையிடவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நினைவு இல்லமாக மாற்றியதாக தெரிவித்தார். மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்வோம் என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, வேதா இல்லம் நிச்சயம் மீட்டெடுக்கப்படும் என உறுதி அளித்தார். அம்மா கிளினிக் தொடர்ந்து செயல்பட திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகத்தை அவர் தொடங்கி வைத்தபின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இதை தெரிவித்தார்.