நான் அரசுப் பள்ளி மாணவன்.. இதுக்கெல்லாம் பயப்படுற ஆளா? - வெகுண்டெழுந்த எடப்பாடி பழனிசாமி!
சேலம் : திமுக போடும் பொய் வழக்குகளைக் கண்டு பயப்பட மாட்டேன், நான் அரசுப் பள்ளி மாணவன் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
அதிமுகவில் மட்டும்தான் ஜனநாயகம் இருக்கிறது. சாதாரண விவசாயி கூட அதிமுகவில் பொறுப்பிற்கு வர முடியும். ஆனால் திமுகவில் அப்படி வர முடியாது என ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.
அதிமுவை எவராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள், அதிமுக நடத்திய ஒரு போராட்டத்திற்கே திமுக அரசு பயந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துப் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதிமுக பொதுச்செயலாளர் “யார்” தெரியுமா? கறுப்பு “ஆடு” - எடப்பாடி பேச்சை கேட்டு தொண்டர்கள் “விசில்”
தகுதியான கட்சி அதிமுக
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "அண்ணா பிறந்தநாளைக் கொண்டாட தகுதியுள்ள கட்சி அதிமுக தான். பெயரில் அண்ணா, கொடியில் அண்ணா என அண்ணாவிற்கு பெருமை சேர்த்த கட்சி அதிமுக தான். பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூன்று தலைவர்களும் மக்களுக்காக உழைத்தவர்கள். உயிரோட்டமுள்ள திட்டங்களின் மூலம் அவர்கள் மறைவிற்கு பின்னரும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் தான் மக்கள் இயக்கமாக அதிமுக நீடிக்கிறது.
திமுக அரசு பயந்துவிட்டது
அனைத்து போராட்டத்திற்கும் அனுமதி கொடுத்து அதனை சமாளித்தோம். 4 ஆண்டுகள் சிறப்பான முறையில் நான் ஆட்சி நடத்தினேன். ஆனால் இன்றைய முதலமைச்சரால் எதையும் சமாளிக்க முடியவில்லை. தற்போது அ.தி.மு.க. நடத்திய ஒரு போராட்டத்திற்கே திமுக அரசு பயந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என மு.க.ஸ்டாலின் பேசி வருவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.
மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள்
அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் தற்போது வழங்கப்படவில்லை. மாணவ மாணவிகளுக்கு அறிவுப்பூர்வமான கல்வி கொடுத்து வரலாறு படைத்தது அதிமுக ஆட்சி. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டத்தை ரத்து செய்து ஏழை, எளிய குடும்பங்களின் கனவை சிதைத்த திமுக அரசை மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
நான் அரசுப் பள்ளி மாணவன்
திமுகவை பிளவுபடுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். அவருக்கு சிலர் துணை போகின்றனர். கருப்பு ஆடு யார் என்பது உங்களுக்கு தெரியும். அதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளோம். அதிமுகவில் பொய் வழக்கு போடுவதை கண்டு இந்த எடப்பாடி பழனிசாமி பயந்தவனா? நான் அரசுப் பள்ளியில் படித்த மாணவன், எதற்கும் பயப்பட மாட்டேன்.
வெளிநாட்டுக்குதான் போகணும்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாட்டின் வளர்ச்சி சட்டம் ஒழுங்கை பொறுத்து தான் உள்ளது. ஆனால், கஞ்சா விற்பனை செய்யாத இடமே கிடையாது. போதைப் பொருளை தடுக்க வேண்டிய அரசே வேடிக்கை பார்க்கிறது. சட்டவிரோத செயல்களில் திமுகவினரே ஈடுபடுகின்றனர். திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் என்று நான் சொன்னதற்கு, நிறைய முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார். 4 முதலமைச்சருக்கே நாடு தாங்கவில்லை. இன்னும் நிறைய பேர் என்றால் நாமெல்லாம் வெளிநாட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
அதிமுகவை மிரட்ட முடியாது
அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதோடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். இதன் மூலம் அதிமுகவை மிரட்ட முடியாது. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வேகம் காட்டப்படுவதில்லை. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய பார்க்கிறார்கள். காவல்துறையை வைத்து வழக்குகளை வாபஸ் பெற பார்க்கிறார்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன்
மக்கள் துணையோடு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பதவிக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது? தற்போது எவ்வளவு இருக்கிறது? என்பதை கணக்கெடுத்து சோதனை நடத்தப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்றும் திமுகவின் பகல் கனவு இனி பலிக்காது" எனப் பேசினார்.