பாரதமாதா ஆலய பூட்டு உடைப்பு! பாஜகவின் கேபி.ராமலிங்கத்துக்கு நெஞ்சு வலி! 15 நாட்கள் நீதிமன்ற காவல்
சேலம்: பாரத மாதா ஆலயப் பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக சார்பில் பாத யாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கர் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து அவர்கள் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர்.
பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயம் பூட்டு உடைப்பு- பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது
சிலை
இருப்பினும், பாரதமாதா நினைவாலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில் கண்காணிப்பாளரிடம் கதவைத் திறக்கும்படி வலியுறுத்தினர். இருப்பினும், அவர் அதிகாரிகளிடம் கேட்ட கதவைத் திறக்க முடியும் எனக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனிடையே கதவின் பூட்டை உடைத்து பாஜகவினர் உள்ளே சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.
கைது
இந்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் 14ஆம் தேதி காலை ராசிபுரத்தில் பென்னாகரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக கே.பி.ராமலிங்கம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் தனக்கு ரத்தக் கொதிப்பு, நெஞ்சுவலி உள்ளிட்ட உடல் பிரச்சினைகள் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
சிகிச்சை
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு கே பி ராமலிங்கம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில் நேற்று மாலை சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணாகரம் மேஜிஸ்டேட் பிரவீனா கேபி ராமலிங்கத்தின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.
நீதிமன்ற காவல்
இதையடுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறைத்துறை காவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், வரும் ஆகஸ்ட் 29 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.