உடம்பெல்லாம் அரிக்குதுங்க.. மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை கேட்ட "சின்னப்பையன்".. அடுத்த செகண்டே பகீர்
சேலம்: உடல் அரிப்புக்கு மாத்திரை வாங்குவதற்காக மெடிக்கல் ஷாப் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபத்தை கண்டு சேலம் மாவட்டமே அதிர்ந்து போய் கிடக்கிறது.. சம்பந்தப்பட்ட மெடிக்கல் ஷாப் வாசலிலேயே உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தும் அளவுக்கு கொந்தளித்து விட்டனர்.. என்ன நடந்தது?
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள விளாம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான சின்ன பையன் வசித்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக உடலில் அரிப்பு பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில்,விளாம்பட்டி அருகில் இருக்கும் வெள்ளாளப்பட்டியில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக இவர் சில நாட்களுக்கு முன்னர் சென்றிருக்கிறார்.
இவர் மகள் வீட்டுக்கு வரும்போது அரிப்புக்கான மாத்திரை மற்றும் மருந்து எதையும் கையோடு கொண்டுவரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மகள் வீட்டில் தங்கியிருந்தபோது அரிப்பு அதிகரித்திருக்கிறது. அரிப்பு இருந்த இடத்தில் இவர் என்னென்னவோ போட்டு பார்த்திருக்கிறார். ஆனால் அரிப்பு குறையவில்லை. எனவே அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று இதற்காக மருந்து கேட்டிருக்கிறார். மருந்து கடைக்காரர் பூபதி ஊசி போட்டு மாத்திரை ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.
ஊசி
ஆனால் ஊசி போட்டுக்கொண்டு வெளியே வந்த கூலி தொழிலாளி சின்ன பையன் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. எனவே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சின்ன பையன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த தகவலை கேட்ட மருந்துக்கடை உரிமையாளர் பூபதி உடனடியாக கடையை பூட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். சம்பவம் அறிந்த கூலி தொழிலாளி சின்ன பையனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் பெத்த நாயக்கன் பாளையம் வட்டாட்சியர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசியுள்ளனர். பின்னர் கூலி தொழிலாளி சின்ன பையனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மருந்து கடையை பூட்விட்டு தப்பி சென்ற பூபதி மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். மறுபுறம் மருந்து கடைக்கான உரிமம் உள்ளிட்டவற்றை சோதனை செய்த அதிகாரிகள், உரிமம் இல்லாமல் மருந்து கடை இயங்கி வந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
சீல்
இதனால் மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பொதுவாக உடல் அரிப்புக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. குடலில் புழு இருந்தால் கூட அரிப்பு என்பது அதிகமாக இருக்கும். ரத்தத்தில் உருவாகும் இம்யூனோகுளோபுலின் எனும் புரதம்தான் இந்த அரிப்புக்கு பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. எனவே முறையாக பரிசோதனை செய்து அரிப்பு என்ன காரணம் என்பதை புரிந்து கொண்டு பின்னர் அதற்கேற்ப சிகிச்சை பெறுவது சிறந்தது என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தவறான சிகிச்சை
ஆனால் அன்றாடம் கூலி தொழில் செய்து வருபவர்கள் முறையான பரிசோதனை மேற்கொள்ள போதுமான வசதி இல்லாத காரணத்தினால் இப்படி மருந்து கடை ஊழியர்களின் ஆலோசனையின் பெயரில் சில தவறான மருந்துகளை உட்கொள்வதால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் பேர் இப்படி தவறான மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளில் இந்த உயிரிழப்புகள் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.