நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், விரக்தியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உட்பட நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை, சுமார் 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில், நீட்டில் தோல்வியுற்றதால் மருத்துவ படிப்பில் சேர முடியாது என்ற விரக்தியில் திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ, புதுக்கோட்டையை சேர்ந்த வைசியா, மற்றும் விழுப்புரம் மோனிஷா ஆகிய 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசு என்ற பகுதியை சேர்ந்த மாணவன் பாரதபிரியன். இவர் நீட் தேர்வில் 111 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததாக கூறப்படுகிறது. நீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், பாரதபிரியனின் மருத்துர் கனவவில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அரசுக்கல்லூரியில் பாரதபிரியனுக்கு மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைக்கவில்லை.
எனவே கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார் பாரதபிரியன். அவரது வேதனையை எண்ணி பாரதபிரியனின் பெற்றோர் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அணுகி, தங்களது மகனுக்கு மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைக்குமா என அலைந்துள்ளனர்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் லட்சக்கணக்கில் கல்வி கட்டணம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாரதபிரியனின் பெற்றோர், தனியார் கல்லூரிகளில் கேட்கும் கட்டணத்தை தங்களால் கட்ட முடியாது. எனவே வேறு பாடப் பிரிவை தேர்வு செய்து படி அல்லது ஒருவருடம் காத்திருந்து அடுத்த வருடம் மீண்டும் நீட் தேர்வெழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறியுள்ளனர்.
வீட்டின் பொருளாதார சூழ்நிலையை தெரிந்தும் தம்மால் இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லையே என மிகவும் மனவேதனையுடன்காணப்பட்ட பாரதிபிரியன், நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பி பெற்றோர் பாரதபிரியனின் நிலை கண்டு கதறியழுதனர்.
பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமலேயே உறவினர்களே மாணவன் பாரதபிரியனின் உடலை அடக்கம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் பரவியதை அடுத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications