நான் கூட கல்லால் அடிச்சுட்டாங்கன்னு நினைச்சேன்- உதயநிதியின் செங்கல் வீடியோவை பார்த்து பதறிய ஸ்டாலின்
ஆத்தூர்: தேர்தல் பிரசாரத்தின் போது கல்லால் அடிச்சுட்டாங்க போல.. அதைத்தான் எடுத்து காட்டுகிறாரோ என நினைத்தேன் என மகன் உதயநிதியின் எய்ம்ஸ் செங்கல் பிரசாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதி கையில் எடுத்துள்ள நூதன பிரசாரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
ஆனால் அதிமுக-பாஜக அணியினர் தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துவிட்டோம் என பிரசாரம் செய்கின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மீம்ஸ்காரர்களுக்கு படுதீனியாகவும் இருந்து வருகிறது.
உதயநிதி செங்கல் பிரசாரம்
இப்போது தேர்தல் களத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கையில் செங்கல் ஒன்றை எடுத்து செல்கிறார். இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்.. இதைத்தவிர அங்க வேறு எதுவும் இல்லை என பிரசாரம் செய்கிறார். அவரது இந்த பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு.
ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
இந்த நிலையில் சேலம் ஆத்தூர் உள்ளிட்ட தொகுதிகளின் திமுக வேட்ப்பாளர்களை ஆதரித்து இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என்றார்.
டிவியில் பார்த்து பதறிய ஸ்டாலின்
மேலும், நம்ம இளைஞரணி செயலாளர் உதயநிதிதான் எல்லா இடத்திலும் செங்கல்லை எடுத்து எடுத்து காண்பிச்சுகிட்டு இருக்காரு.. நான் கூட டிவில பார்த்தப்ப.. யாரோ கல்லை எடுத்து அடிச்சுட்டாங்க.. அதைத்தான் எடுத்து காண்பிக்கிறாரோ என பார்த்தா.. அது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டிய செங்கல்ன்னு காமிக்கிறாரு... எய்ம்ஸ் விவகாரத்தில் அபாண்டமான பொய்யை சொல்கிறது அதிமுக அரசு என குறிப்பிட்டார்.