வீட்டு வாடகை கேட்டது ஒரு குத்தமா? ஹவுஸ் ஓனரை அடித்துக் கொன்ற இரும்பு வியாபாரி! சேலம் அருகே துயரம்!
சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே வீட்டு வாடகை பாக்கியை கேட்ட உரிமையாளரை, பழைய இரும்பு வியாபாரி அடித்துக் கொன்ற துயர நிகழ்வு அரங்கேறியுள்ளது.
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை என்பார்களே அதை போல் தான், வீட்டை வாடகைக்கு தருமாறு முதலில் கெஞ்சிக் கேட்டுவிட்டு பிறகு வாடகை பாக்கிக்காக வீட்டின் உரிமையாளரையே அடித்துக் கொன்ற நிகழ்வு பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தோப்பூரை சேர்ந்தவர் தனசேகர். 60 வயதாகும் தோப்பூர் தம்பி டாக்டர் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அதில் ஒரு போர்ஷனில் இவர் குடியிருந்துக் கொண்டு மற்றொரு போர்ஷனை வாடகைக்கு விட்டிருக்கிறார். பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டை வாடகைக்கு கேட்டதன் அடிப்படையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் அவரை குடியமர்த்தியிருக்கிறார் தனசேகர்.
பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் பாலசுப்ரமணி முதல் மாதம் மட்டும் முறையாக வாடகைப் பணத்தை கொடுத்ததாகவும் அடுத்த இரண்டு மாதங்கள் வாடகைப் பணம் தரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மாத வாடகை பாக்கியை கேட்டு கேட்டு அலுத்துப் போன தனசேகர், கடைசியாக வீட்டை காலி செய்துக் கொள்ளுமாறு பழைய இரும்பு வியாபாரி பாலசுப்ரமணியனிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து பாலசுப்ரமணியனும் உடனடியாக வீட்டை காலி செய்வதாக கூறி பொருட்களை எடுத்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
அப்போது 2 மாத வாடகை பாக்கி தொடர்பாக தனசேகருக்கும், பாலசுப்ரமணியனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்றிருக்கிறது. இதனால் ஆத்திரத்தில் கீழேகிடந்த மரக்கட்டையை எடுத்து வீட்டின் உரிமையாளர் தனசேகர் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார் பாலசுப்ரமணி. இதில் தனசேகர் மயக்கமுற்று விழுந்ததால் அவரை அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே சிகிச்சை பலனின்றி வீட்டின் உரிமையாளர் தனசேகர் நேற்று உயிரிழந்ததால் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் வீட்டில் வாடகைகு குடியிருந்த பழைய இரும்பு வியாபாரி பாலசுப்ரமணியனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications