தலைக்கேறிய ஜாதி வெறி.. “கோயிலுக்கு வந்தால் கொல்வேன்”.. தலித் இளைஞரை தாக்கிய திமுக நிர்வாகி கைது
சேலத்தில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மீது போலீசில் புகாரளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சேலம்: அறநிலையத் துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் உள்ளிட்ட 10 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரியும் பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சேலம் மாவட்டம் திருமலைகிரி மாரியம்மன் கோவிலுக்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயர் சாதியினர் விதித்த தடையை மீறி கோயிலுக்குள் நுழைந்ததற்காக அவரை தி.மு.க ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் டி.மாணிக்கத்தை தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்தார் திமுக பொதுச் செயலாளார் துரைமுருகன்.
காது கூசுதே.. “செத்து போயிடுவ!” கோயிலுக்கு சென்ற தலித் இளைஞரை திட்டி தள்ளிய திமுக நிர்வாகி சஸ்பெண்ட்
காவல் நிலையத்தில் புகார்
இந்த நிலையில் திமுக நிர்வாகி மாணிக்கம் உள்ளிட்ட 10 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட இளைஞர் பிரவீன் குமார் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதில் தெரிவித்து உள்ளதாவது, "நான் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.
அடிக்க வந்த உயர்சாதியினர்
எங்கள் ஊரில் அரசுக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அதற்கு ஊர் மக்கள் சார்பில் திருவிழாவிற்கான ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 26/01/2023 அன்று இரவு 8:30 மணியளவில் அந்த மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வெளியே வந்த போது அங்கே அமர்ந்திருந்த வெங்கடாசலம் மற்றும் கூலைகவுண்டர் என்று அழைக்கப்படும் இருவரும் என்னை பார்த்து நீ ஏன்டா கோவிலுக்குள் சென்றாய் உங்களை எல்லாம் உள்ளே வரக்கூடாது என்றும் கூறி அடிக்க வந்தனர்.
பேச அழைத்த திமுக நிர்வாகி
மேலும் உன்னை காலையில் பார்த்துக் கொள்கிறோம் என்று மிரட்டினார்கள். அதன்பின் 27/01/2023 அன்று காலை சுமார் 8:30 மணியளவில் பெரிய மாரியம்மன் கோவில் வாசாலுக்கு திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் என்னை அழைத்து வரச் சொன்னதாக கூறி எங்கள் ஊரை சேர்ந்த சிலர் அழைத்துச் சென்றனர்.
தகாத வார்த்தைகளால் மிரட்டல்
பெரிய மாரியம்மன் கோவில் வாசலில் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூலைகவுண்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். என்னை பார்த்த உடன் அங்கே இருந்த திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி உன்னை யாருடா கோவிலுக்குள் போகச் சொன்னது.
சாதியை சொல்லி விமர்சனம்
மேளம் அடிக்கும் நாய்கள் நீங்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது என்று திட்டி என் நெஞ்சில் தாக்கினார். அப்போது வெங்கடாசலம் என்பவர் இந்த கீழ் சாதி பையன்கிட்ட நானே வரக்கூடாது என்று கூறியும் மீண்டும் திமிராக கோவிலுக்குள் வருகிறான். இவனை சும்மா விடக்கூடாது என்று மிரட்டினார்.
கொலை மிரட்டல்
அதன்பின் என் பெற்றோர்களும் நானும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சினோம். அதன் பின் வெங்கடாசலம், மாணிக்கம் உள்ளிட்டவர்கள் என்னை இனி கோவிலுக்குள் நுழைந்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள். அதன்பின் அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்து வந்தேன்.
வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை தேவை
சாதியை காரணமாக வைத்து அரசுக்கு சொந்தமான கோவிலில் என்னையும் என் சாதியை சமூகத்தையும் நுழையக்கூடாது என்று மிரட்டியும் கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூலைகவுண்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
கைது செய்த போலீஸ்
இதனை தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சேலம் இரும்பாலை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.