எங்களால் முடியவில்லை.. தயவு செய்து வெளியே வராதீங்க.. கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய தூய்மை பணியாளர்
சேலம்: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் பணிபுரியும் தங்கராஜ் என்ற தூய்மைப் பணியாளர் வெளியிட்ட உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது வீடியோவில் மக்களை தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எங்களால் முடியவில்லை வேலை செய்வதற்கு கடும் சிரமத்தை சந்திக்கிறோம் என்று கண்ணீர் விடாத குறையாக கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு ஒருபுறம் எனில் உயிரிழப்பும் அந்த நோயின் தாக்கத்தால் மக்கள் சந்திக்கும் அவதிகளும் மிக கொடுமையானது. ஆனால் பலரும் உணர்வதில்லை. முககவசம் அணியாமல் வெளியில் செல்வது, முகக் கவசம் அணியாமல் சகஜமாக எல்லோரிடமும் பேசுவது போன்ற செயல்களில் இன்னும் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
முழு ஊரடங்கு அதாவது தளர்வுகளற்ற ஊரடங்கு போட்ட பிறகும் மக்கள் வெளியில் சுற்றுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். எவ்வளவுதான் காவல்துறையினர் தடுப்புகள் போட்டாலும் இருசக்கர வாகனத்தில் சந்து பொந்துகளில் நுழைந்து சுற்றுகிறார்கள். இதனால் போலீசார், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கடும் சிரமங்களையும் சந்திக்கிறார்கள்.
சேலம் பணியாளர்
தினசரி கொரானா பாதிப்பு உயர்ந்து வருவதற்கு மக்கள் வெளியில் சுற்றுவதும் முகக் கவசம் அணியாமல் எல்லோருடனும் சகஜமாக பேசுவதுமே முக்கிய காரணம். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் ஆக பணிபுரிந்து வருபவர் தங்கராஜ். இவர் மக்களுக்கு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
மருத்துவ பணியாளர்கள்
அவர் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, மருத்துவ பணியாளர்கள் சார்பாகவும், காவல்துறையினர் சார்பாகவும் , ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சார்பாகவும், பேரூராட்சி , நகராட்சி , ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் சார்பாகவும், உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
வீட்டுக்குள்ளேயே இருங்கள்
கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அநாவசியமாக தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் முக கவசம் கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள். கொரோனா பாதிப்பால் தந்தையை, இழந்து தாயை இழந்து எத்தனையோ பேர் தவித்து வருகிறார்கள். தயவுசெய்து வீட்டுக்குள்ளேயே இருங்கள்
நிம்மதி அடைவார்கள்
எங்களால் வேலை செய்ய முடியவில்லை. நீங்களெல்லாம் ஒத்துழைப்பு கொடுத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் உயிரோடு இருப்பார்கள். தயவுசெய்து மாஸ்க் போடுங்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவே தமிழக அரசும் ஊரடங்கு போட்டிருக்கிறது . தயவுசெய்து ஊரடங்கு கடைபிடியுங்கள். தயவுசெய்து வீட்டுக்குள் இருங்கள். நீங்களெல்லாம் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் எங்களை போன்ற பணியாளர்கள் கொஞ்சம் நிம்மதி அடைவார்கள்.
உறவுகள் கதறல்
சுடுகாட்டில் பிணம் எரிப்பவர் நிலைமையை பார்த்து அழுகிறார். போலீஸ்காரர்கள் வெயில் மழையை பார்க்காமல் எவ்வளவு பாடுபடுகிறார்கள். அப்பாவை இழந்து அம்மாவை இழந்து சொந்த பந்தங்களை இழந்து எவ்வளவு பேர் பரிதவிக்கிறார்கள் டிவியில் பார்க்கிறீர்கள்.. பேப்பரில் பார்த்திருப்பீர்கள் .. நேரில் பார்த்திருப்பீர்கள்.. நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் நாங்கள் கொஞ்சம் ஃப்ரியாவோம். கொஞ்சம் மாஸ்க் போட்டுகிட்டு வெளியே வாங்க.. சரி வெளியே எதுக்கு வரீங்க அதான் ஊரடங்கு போட்டு இருக்காங்கல்ல.. தயவுசெய்து வெளியே வராதீர்கள் நம்ம பாதுகாப்புக்காக தான் அரசு சொல்லுது.
ஊரடங்கை கடைபிடியுங்கள்
எங்கள் நிலைமையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். போலீஸ்காரர்களுக்கு குடும்பம் இல்லையா? டாக்டர்களுக்கு குடும்பம் இல்லையா ?செவிலியர்களுக்கு குடும்பம் இல்லையா ?அல்லது எங்களுக்கு குடும்பம் இல்லையா.. ! நாங்க எத்தனை பேர் உயிர் போயிருக்கோம்.. போலீஸ்காரர்கள் எத்தனை பேர் இறந்து இருக்காங்க.. டாக்டர்கள் எத்தனை பேர் செத்து இருக்கிறார்கள்.. அதனால் தயவு செய்து கடைபிடியுங்கள் ஊரடங்கை.. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" இவ்வாறு கண்ணீர் மல்க தூய்மைப்பணியாளர் தங்கராஜ் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.