எடப்பாடிக்கு ‘பாஸ்’ மார்க் போட்ட சசிகலா! அதுவும் அவர் ஊரிலேயே! நடந்தது நடந்து போச்சு.. ஓஹோ அது தானா?
சேலம் : பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்று கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் சசிகலா அதிமுக ஆட்சியில் உலகமே வியந்து பாராட்டும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என எடப்பாடி பழனிசாமி ஆட்சியை புகழ்ந்து பேசியிருப்பதும், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என பேசியுள்ளது பல யூகங்களை கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுக்குழு விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஆனால் தற்போதைக்கு அதற்கெல்லாம் முடிவு கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது ஹாலிவுட் திரில்லர் கிளைமேக்ஸ் போல் குழப்பமாக உள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வரிந்து கட்டி களமிறங்கியுள்ளனர். ஆனால் சசிகலா இதுவரை எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சித்தது கிடையாது.

சசிகலா
அதே நேரத்தில் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் என கூறி வருகிறார். இந்நிலையில் சசிகலா பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்று கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் சசிகலாவை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் கட்சிக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்றும் கூறிவருகிறார். இதனிடையே பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் பயணம் மேற்கொள்கிறார் என்ற தகவல் வெளியானதுமே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சேலத்தில் சுற்றுப் பயணம்
இன்று மாலை சாலை மார்க்கமாக சேலம் வந்த அவரை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி ஆகிய இடங்களில் பேசிய அவர், பின்னர் தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் பேசினார். சூரமங்கலம் உழவர் சந்தை பகுதியில் முதல்நாள் சுற்றுப்பயணத்தை முடிக்கும் சசிகலா, இரவு சேலத்தில் தங்கும் அவர், செவ்வாய்க்கிழமை அரியானூர், சங்ககிரி வழியாக ஈரோட்டிற்கு செல்கிறார்.

அதிமுக ஆட்சி
இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சசிகலா," அதிமுக ஆட்சியில் உலகமே வியந்து பாராட்டும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போதைய திமுக ஆட்சியில் அனைத்து மக்கள் நல திட்டங்களும் தற்போதும் முடங்கிப் போய் உள்ளன. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். தன்னலமற்ற தொண்டர்கள் உள்ளனர். எதிரிகள் என்ன சூழ்ச்சி செய்தாலும் எதுவும் செய்ய முடியாது.

நடந்தவை நடந்தவையாக..
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நாம் இயக்கம் மிகப்பெரிய சரி வை சந்தித்தது, எந்த இயக்கமும் இது போன்ற சரிவை சந்தித்தது கிடையாது. நியாயம் தோற்காது உண்மைக்கு என்றும் வலிமை அதிகம் என பேசினார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை சசிகலா புகழ்ந்து பேசி இருப்பதும், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என கூறியுள்ளது பல்வேறு யூகங்களை கிளப்பி இருக்கிறது.

கிளம்பும் யூகங்கள்
ஏற்கனவே எடப்பாடியை எதிர்த்து கிட்டத்தட்ட ஓ.பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில் சசிகலாவின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலாவின் பேச்சுகளுக்கு எந்த விதத்திலும் மதிப்பளிக்க போவதில்லை எனவும் அவரும் ஓ பன்னீர்செல்வமும் அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்கின்றனர் சேலம் தரப்பு நிர்வாகிகள். இன்னும் ஒரு நாள் கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மீதமிருக்கும் நிலையில், சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications