"அலட்சியம்".. பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்.. தவறான ஊசியால் பறிபோன கண்.. சேலத்தில் ஷாக்!
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதால் ஒரு கண்ணையே அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்களின் இந்த அலட்சியப்போக்கை கண்டித்து சேலம் அரசு மருத்துவமனை முன்பு அப்பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏழை எளிய மக்கள் நாடி வரும் அரசு மருத்துவமனை இந்த அளவுக்கு அலட்சியப்போக்கில் செயல்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. உள்ளாட்சி தேர்தல்: இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல்- ஹைகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சத்யா (29). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த அக்டோபர் 31-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் சத்யா அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், நவம்பர் 4-ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கையில் நரம்பு ஊசி
குழந்தை பிறந்ததற்கு பிறகு சத்யாவுக்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் போடப்பட்டிருக்கிறது. இதில் சில நிமிடங்களிலேயே சத்யாவின் வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உட்பட உறவினர்கள் சிலர், அரசு மருத்துவமனை மருத்துவரை சந்தித்து, சத்யாவுக்கு தவறான ஊசி போட்டதால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
கண் அகற்றம்
மேலும், சத்யாவை டிஸ்சார்ஜ் செய்யுமாறும், தனியார் மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்கிறோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், சத்யாவை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து, அங்கே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி சத்யாவுக்கு கண் பார்வை போயுள்ளது. இதன் பிறகு, அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ததும், அவரது உறவினர்கள் தனியார் மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணை அகற்றவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து எனக் கூறி கண்ணை அகற்றியுள்ளனர்.
ஆவேசம் - போராட்டம்
இதனால் ஆவேசம் அடைந்த சத்யாவின் உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் தவறான ஊசி போட்ட மருத்துவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். ஒருகட்டத்தில், அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்குள் நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சத்யாவின் உறவினர்களிடம் போலீஸாரும், மருத்துவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.