குழந்தைகள் மத்தியில் அதிவேகமாக பரவும்.. B.1.617 இரட்டை மரபணுமாறிய கொரோனா..பள்ளிகளை மூடிய சிங்கப்பூர்
சிங்கப்பூர்: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 கொரோனா குழந்தைகள் மத்தியில் அதிகம் பரவுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் பல மாதங்களுக்குப் பிறகு நேற்று 38 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில் தினசரி கொரோனா பாதிப்புகளில் இதுதான் அதிகமாகும்.
கதறவிடும் கொரோனா.. சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள், கல்லூரிகள்.. சென்னை கமிஷனர் அதிரடி
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வகை தற்போது சிங்கப்பூரிலும் பரவி வருகிறது. இந்த B.1.617 உருமாறிய கொரோனா காரணமாக வைரஸ் பரவல் அதிகரித்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகள் மூடல்
இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டில் பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் இந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் வழியே மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூர் இந்த முடிவை எடுத்துள்ளது.
குழந்தைகளை தாக்குகிறது
இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஓங் யே குங் கூறுகையில், இந்த B.1.617 உருமாறிய கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று தோன்றுகிறது. இந்த உருமாறிய கொரோனாவில் சில வகைகள் வேகமாகப் பரவுகின்றன. அதேபோல குழந்தைகளையும் இவை அதிகமாகத் தாக்குகின்றன. இது பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது" என்றார்.
கொரோனா தடுப்பூசி
தற்போது வரை உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் 18+ வயதினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், B.1.617 உருமாறிய கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாகச் சிங்கப்பூர் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதுக்குக் குறைவானவர்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக சிங்கப்பூர் சுகாதார துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டில் ஊரடங்கு விதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயணிகளைத் தவிர மற்றவர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராகத் தொடக்கம் முதலே சிங்கப்பூர் அதி தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.