வளம் தரும் தவ்வை..1000 ஆண்டுகள் பழமையான தமிழகத்தின் தாய் தெய்வம்..சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு
சிவகங்கை: திருப்பாச்சேத்தி செல்லப்பனேந்தல் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான தவ்வை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வாளர்கள் மதன், மணிகண்டன், அறிவுசெல்வம், தேவி கண்டுபிடித்தனர். 2 அடி உயரம் 3.5 அடி நீளபலகை கல்லில் தவ்வை தன்மகன் 'மாந்தன்', மகள் 'மாந்தி'யுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்.
மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வம். மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள். மூதேவி என்றால், மூத்த தேவி,தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு.
கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. "தவ்வை" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள்.
அடங்காத கேரளா ஆளுநர் ஆரிப் கான்.. பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து தூக்க பினராயி அமைச்சரவை ஒப்புதல்!
தவ்வை வழிபாடு
நம் முது தந்தையரை எப்படி 'மூதாதையர்' என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்ததேவிக்கு 'மூதேவி' என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான 'அக்கை' என்கிற வார்த்தை எப்படி 'தமக்கை' ஆனதோ, அதேபோல் 'அவ்வை' என்ற வார்த்தை 'தவ்வை' ஆகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்கு சகோதரி தவ்வை.
தவ்வை சிலைகள்
உரத்தின் அடையாளம் 'தவ்வை'. நெற்கதிர்களின் அடையாளம் 'திருமகள்'. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே தவ்வை சிலைகள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தேனி அருகேயும்,காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயும் தவ்வை சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தவ்வை கோவில்கள்
தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல், 'தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன், சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கிய'தாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 - ம் ஆண்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி 13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.
மூதேவி
சைவ - வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழரின், உரத்துக்குப் பின்னர் செழிப்பு என்பதன் தத்துவத்தின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதே போல் வருணனின் மனைவியாகவும் சொல்லப்படுகிறது. வருணன் மழைக் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேஸ்டா தேவி
தவ்வை பல கோயில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் தவ்வை தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் தவ்வைக்கு தனி இடம் உண்டு.
தமிழகத்தில் தவ்வை கோவில்கள்
வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை, சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள்.. கிழிந்த ஆடை, அசிங்கமான தோற்றம், காக்கைக் கொடி இவையே தூமாதேவியின் அடையாளங்களாக உள்ளன. தவ்வைக்கும் இவையே அடையாளங்களாக உள்ளன. தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோயில்களும் உள்ளன.
உத்திரமேரூர் தவ்வை சிலை
கடந்த மார்ச் மாதம் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய தவ்வை சிலை உத்திரமேரூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஆற்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள பிடாரி கோயில் செல்லும் வழியில் உள்ள காவாங்கரையில் தலைகள் மட்டுமே தெரிந்தபடி கற்சிலைகள் புதைந்து இருந்தது. இதனை பொதுமக்கள் பத்திரமாக தோண்டி எடுத்து சுத்தம் செய்தனர். அந்த சிலையை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் ஆய்வு செய்தார். அப்போது இந்த கற்சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் தெரிந்தது. மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையானது 4 அடி உயரத்தில் 3 அடி அகலத்தில் தனது மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் மூவரும் அமர்ந்தநிலையில் கரண்டமகுடத்துடன் கண்ணைக் கவரும் வகையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளுடன் காணப்பட்டது. மூத்த தேவியின் வலப்பக்கம் மாட்டுத் தலை கொண்ட அவரது மகன் மாந்தன் கையில் ஆயுதத்துடனும், இடப்பக்கம் அவரது மகள் மாந்தியும் வீற்றிருக்கிறார்கள். மூத்த தேவி தலையின் வலப்பக்கம் தூய்மையின் அடையாளமான துடைப்பமும், வலப்பக்கம் அவரின் சின்னமான காக்கை கொடியும் உள்ளது. மூத்த தேவியுடைய தலையில் கரண்ட மகுடமும் காதில் பத்ர குண்டலமும் கழுத்தில் சரப்பளி ஆபரணமும் தோல்களில் வாகு வளையங்களும் கைகளில் வளையல்களும் பருத்த வயிறோடு விரிந்த கால்களும் இடையில் இருந்து பாதம் வரை நீண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையோடு புன்னகையான முகத்துடன் அழகிய புடைப்பு சிற்பமாக காட்சியளிக்கிறது.
சிவகங்கை தவ்வை சிலை
மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள திருப்பாச்சேத்தி செல்லப்பனேந்தல் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான தவ்வை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வாளர்கள் மதன், மணிகண்டன், அறிவுசெல்வம், தேவி கண்டுபிடித்தனர். 2 அடி உயரம் 3.5 அடி நீளபலகை கல்லில் தவ்வை தன்மகன் 'மாந்தன்', மகள் 'மாந்தி'யுடன் அமர்ந்த நிலையில் உள்ளார். கை சிதைந்துள்ளதால் சிலை குறித்த குறிப்புகளை விரிவாக அறிய முடியவில்லை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய் தெய்வம்
இந்த தவ்வை சுகாசனத்தில் வலது கையில் மலர் பிடித்து, இடது கையை தன் தொடையில்வைத்து, பின் கொண்டையுடன் அமர்ந்துள்ளார்.முழு ஆடை உடுத்தி கீழே பார்த்தபடி உள்ளார். வலதுபுறம் மகன் மாந்தன் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். கை சிதைந்துள்ளதால்அதுகுறித்த குறிப்புகளைஅறிய முடியவில்லை. இடதுபுறம் மகள் மாந்தியும்அமர்ந்த கோலத்தில் கொண்டை, கழுத்து அணிகளுடன், வலது கையில் மலர் பிடித்து, இடது கையை தொடையில் வைத்தும் செதுக்கப்பட்டுள்ளார். தவிர, மதுரை தெற்குமாசி வீதி தென்னோலைக்காரத் தெருவேப்ப மரத்தடியில் குன்று கல்லில் 16ம் நுாற்றாண்டின் நடுகல் வீரர் சிலையை எங்கள் குழுவைச் சேர்ந்த முனிராஜ் குணா கண்டுபிடித்தார். இந்த சிலை முத்துகருப்பசாமி என்ற காவல் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். இவ்வாறு கூறினர்.