நேர்த்திக்கடனை நிறைவு செய்த கார்த்தி சிதம்பரம்... கோவில்களில் வழிபாடு
சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பிரசித்தி பெற்ற கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.
இயல்பாகவே கார்த்தி சிதம்பரம் பழனி முருகன் கோவிலுக்கு அடிக்கடி செல்லக் கூடிய நபர். மேலும், தைப்பூசம் போன்ற நிகழ்வுகளின் போது பாதசாரிகளுக்கு பல உதவிகளையும் அவர் செய்வார்.
மேலும், அவ்வப்போது தனது வேண்டுதல் நிறைவேறும் போதெல்லாம் முடிகாணிக்கை கொடுத்து மொட்டை அடித்துக் கொள்ளும் வழக்கமும் அவருக்கு உண்டு.

106 நாட்கள் சிறை
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகள் காரணமாக 106 நாட்கள் டெல்லி திஹாரில் சிறைவாசம் அனுபவித்தார். பல்வேறு கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பின்பு ஒரு வழியாக கடந்த வாரம் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

சிவகங்கை சீமை
டெல்லியில் ஓரிரு நாட்கள் மட்டும் இருந்துவிட்டு கடந்த சனிக்கிழமை அன்று சென்னை வந்த சிதம்பரம், ஞயிற்றுக்கிழமை சிவகங்கை சென்றார். அப்போது அவருடன் பயணித்த கார்த்தி சிதம்பரம் திருமயத்தில் பிரசித்த பெற்ற கால பைரவர் ஆலயத்திற்கு தந்தையை அழைத்துச் சென்று தேங்காய் உடைக்க வைத்தார்.

விநாயகர் கோவில்
இதைத் தொடர்ந்து சிவகங்கை நிகழ்ச்சிகளில் ப.சிதம்பரம் கலந்துகொள்ள, அந்த இடைவெளியில் தனது சகாக்களுடன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார் கார்த்தி சிதம்பரம். இதுமட்டுமல்லாமல் ப.சி.விடுதலை பெற்றதை அடுத்து அவரது ஆதரவாளர்களும் கோவில்களில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தட்ட முடியாது
இது தொடர்பாக ப.சி. ஆதரவு வட்டத்தில் உள்ள மிக முக்கிய நிர்வாகியிடம் பேசிய போது, தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருமயத்தில் தலைவர் தேங்காய் உடைத்தார், மற்றபடி கார்த்தி சிதம்பரம் நேர்த்திக்கடன் பற்றியெல்லாம் பேசவிரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications