சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி..கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பு.. பரபரப்பை கூட்டிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்பு பலூன்கள் பறக்கவிட்டனர்.
சிவகங்கை: ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிவகங்கை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இன்று ஒரே நாளில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பில் இருந்தும் இன்று ஒரே நாளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக கூறி காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரினர். ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரே நாளில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம்
இதனை எதிர்த்து இரு தரப்பினரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், ஆர்ப்பாட்டத்தால் எந்த வித சட்டஓழுங்கு பிரச்சனையும் ஏற்படாது என்று மனுதாரர்கள் சிவகங்கை டிஎஸ்பி-யிடம் உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தது.

ஓபிஎஸ், இபிஎஸ்
இதையடுத்து ஓபிஎஸ் தரப்பினர் காலை 10.30. முதல் 12.30 வரை அரண்மனை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்தவும் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனையொட்டி இருதரப்பினரும் பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமியை வரவேற்கும் வகையில் போஸ்டர்கள், பேனர்கள் வைத்துள்ளனர்.

கருப்பு பலூன்கள்
இதனிடையே பன்னீர்செல்வம் தரப்பினர் பழனிசாமி வருகையைக் கண்டித்து பல இடங்களில் ஏகப்பட்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் அணியின் ஆர்ப்பாட்டத்தின் போது, எடப்பாடி பழனிசாமி சிவகங்கைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை செல்லும் எடப்பாடி பழனிசாமி
முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பாக தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை, சிவகங்கையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்காக மதுரைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, பின்னர் சிவகங்கை புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications