Virat Kohli: ஒத்துக்கோங்க விராட் கோலி.. உங்களின் ஈரா முடிவுக்கு வந்தாச்சு.. இது சுப்மன் கில் காலம்!
துபாய்: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் ஈரா முடிவுக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். கடந்த 3 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள நிலையில், மறுமுனையில் சுப்மன் கில் 4 போட்டிகளில் 2 சதங்கள், 2 அரைசதம் விளாசி புதிய ரன் மெஷினாக உருவாகி இருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 228 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் சுப்மன் கில்லின் அபார சதத்தால் எளிதாக வெற்றிபெற்றது. இருந்தாலும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் ஆட்டம் ரசிகர்களிடையே திருப்தியை கொடுக்கவில்லை.

ஏனென்றால் 9 பந்துகள் வரை விராட் கோலியால் ஒரு ரன்னை கூட சேர்க்க முடியாமல் திணறினார். பவர்பிளே ஓவர்களுக்கு பின் துபாய் மைதானத்தில் ரன்கள் சேர்ப்பது எளிதாக இருக்காது என்றாலும், குறைந்தபட்சம் ஒரு ரன்னாவது எடுத்திருக்க முடியும். சுப்மன் கில் அப்படிதான் ஒவ்வொரு ரன்னாக அடித்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். ஆனால் விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் மீண்டும் திணறி வருகிறார்.
இதனால் விராட் கோலி 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இடதுகை ஸ்பின்னர் மற்றும் லெக் ஸ்பின்னர் என்று இரு ஸ்பின்னர்களிடமும் விராட் கோலி திணறியது வெளிப்படையாகவே தெரிந்தது. வழக்கமாக ஐசிசி தொடர் என்றாலே விராட் கோலி தனது உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பார். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இதே வங்கதேசத்திற்கு எதிராக சதம் விளாசி அசத்தியவர்.
ஆனால் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் ஆட்டத்தில் எப்போதும் இருக்கும் நம்பிக்கையும், பிடிப்பும் குறைந்திருப்பதாக வர்ணனையாளர்களே விமர்சித்து வருகின்றனர். இதனால் கடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் எப்படி ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடினாரோ, அதுபோல் ஏதாவது ஒரு இன்னிங்ஸில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கருதப்படுகிறது.
அதேபோல் இந்திய அணியின் துணைக் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சுப்மன் கில், கடைசியாக ஆடிய 4 போட்டிகளில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் என்று விளாசி தள்ளியுள்ளார். 2022க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் முதலிடத்தில் இருக்கிறார். இதனால் விராட் கோலியின் ஈரா முடிவுக்கு வந்து, இந்திய கிரிக்கெட்டில் சுப்மன் கில் ஈரா தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார் கலாச்சாரத்தை தொடரும் வகையில் சுப்மன் கில் புதிய ரன் மெஷினாக உருவாகி வருகிறார். அவரை வார்த்தெடுக்கும் வகையில் துணைக் கேப்டன் பதவியும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விரைவில் ஒருநாள் சுப்மன் கில் கேப்டனாகும் பட்சத்தில், விராட் கோலியின் ஓய்வு வெகு தொலைவில் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications