அந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் எங்கே? கம்பீரின் ஆதரவாளருக்கு கிடைத்த சான்ஸ்.. இந்திய அணி செய்த தவறு
துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஹர்சித் ராணாவை சேர்த்திருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணி களமிறங்கியதற்கு பயிற்சியாளர் கம்பீரின் மோசமான அணுகுமுறையே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - வங்கதேசம் இடையிலான ஆட்டம் துபாய் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷான்டோ பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். துபாய் மைதானத்தில் 2வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிந்த போதும், வங்கதேசம் அணியின் கேப்டன் எடுத்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் வங்கதேசம் அணியின் பேட்டிங் அழுத்தமான நேரங்களில் சொதப்பும் என்பதால், இந்த முடிவு எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்து போல் சேர்க்கப்பட்டிருந்தாலும், பவுலர்களின் தேர்வு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அக்சர் படேல், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் ஸ்பின்னர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அக்சர் படேல் மற்றும் ஜடேஜா இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான திறமை கொண்டு வீரர்கள்தான். இவர்கள் இருவராலும் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பவுலிங் செய்ய முடியாது. இதனால் குல்தீப் யாதவை மட்டுமே இந்திய அணி பிரதான ஸ்பின்னராக தேர்வு செய்திருக்கிறது. இன்னொரு பக்கம் முகமது ஷமி மற்றும் ஹர்சித் ராணா இருவரும் வேகப்பந்துவீச்சாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் ஹர்சித் ராணாவுக்கு இந்திய மண்ணில் விளையாடியே போதுமான அனுபவம் கிடையாது. ஏற்கனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஹர்சித் ராணா மிகப்பெரிய சொதப்பலை செய்தார். இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு செயல்பட்டாலும், துபாய் மைதானத்தின் தன்மை வேறு மாதிரியானது.
இதனால் இந்திய அணி இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை கொண்டு வந்திருக்க வேண்டும். ஏனென்றால் முகமது ஷமிக்கு ஃபிட்னஸ் பிரச்சனைகள் இருக்கும் போது, பவர் பிளே ஓவர்களில் கில்லியாக செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்த கூடியவர் அர்ஷ்தீப் சிங். பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தினாலே, இந்திய ஸ்பின்னர்களால் எளிதாக வங்கதேச பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக அர்ஷ்தீப் சிங் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்துள்ளார். இதனால் அர்ஷ்தீப் சிங்கை விடுத்து ஹர்சித் ராணாவை தேர்வு செய்திருப்பது விமர்சனத்தை பெற்று வருகிறது. இதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதரவே காரணம் என்றும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications