12 பந்துகள்.. பவர் பிளேவில் நின்றுபோன பவுண்டரி.. கோலிக்கு எகிறிய பிரஷர்.. மாட்டிக்கொண்ட மயங்க்!
அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி பவர் பிளே ஓவர்களிலேயே 12 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் தவறவிட்டுள்ளது. பஞ்சாப் அணி விராட் கோலிக்கு ஏற்றவாறு ஃபீல்டர்களை நிறுத்த, அவர் மீது அழுத்தம் அதிகரித்தது. இதனால் அட்டாக் செய்ய முயன்று மயங்க் அகர்வால் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்து பில் சால்ட் ரன் குவிப்பை தொடங்கினார்.

ஆனால் ஜேமிசன் வீசிய 2வது ஓவரிலேயே பில் சால்ட் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, உடனடியாக மயங்க் அகர்வால் பேட்டிங் செய்ய வந்தார். இதன்பின் விராட் கோலி - மயங்க் அகர்வால் கூட்டணி பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டை கொடுக்காமல் அதிரடியாக விளையாடியது. இதனால் பவர் பிளே ஓவரில் ஆர்சிபி அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களை சேர்த்திருந்தது.
ஆர்சிபி அணிக்கு சிறந்த பவர் பிளேவை போல் பார்க்கப்பட்டாலும், பஞ்சாப் அணி மிகப்பெரிய அழுத்தம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதாவது பவர் பிளேவின் இடையிலேயே 12 பந்துகளில் ஒரு பவுண்டரியை கூட விடாமல் கட்டுப்படுத்தி இருக்கிறது. அதாவது 3.4 ஓவர்கள் முதல் 5.3 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.
இந்த பவுண்டரியை நிறுத்தியதன் மூலமாக விராட் கோலியை பஞ்சாப் அணி எளிதாக கட்டுப்படுத்தி இருக்கிறது. விராட் கோலியின் ஃபேவரைட் ஷாட்டான கவர் ட்ரைவ் அடிக்கவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்து ஃபீல்டர்களை நிறுத்தியது. அதேபோல் ஃபிளிக் ஷாட்டை ஆட விடாமல் பஞ்சாப் அணி ஒரு ஃபீல்டரை நிறுத்தியது. இதனால் பவர் பிளேவில் 2 ஓவர்களில் மட்டுமே 10 ரன்களுக்கு மேல் ஆர்சிபி அணி எடுக்க முடிந்தது.
இதனால் வேறு வழியின்றி மயங்க் அகர்வால் அட்டாக் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதற்கேற்ப சாஹலை அட்டாக் செய்ய முயன்று 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் மற்றும் ஆர்சிபி அணிகளின் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்திற்கு ஏற்ப சரியான திட்டத்துடன் வந்துள்ளது. இதனால் அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபி அணியை பஞ்சாப் அணி கட்டுப்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications