காமன்வெல்த் அல்லாத செய்திகளை சேகரிக்க வேண்டுமென்றால்.. கட்டுப்பாடு போடும் இலங்கை
கொழும்பு: காமன்வெல்த் மாநாடு அல்லாத செய்திகளை சேகரிக்க விரும்பும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள், அதற்கு முன்பு உரிய அனுமதியைப் பெற வேண்டும் என்று இலங்கை அரசு புதுக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் அது வெளியிட்டுள்ளது. அதில் காமன்வெல்த் மாநாட்டுக்குத் தொடர்பு இல்லாத, இலங்கை குறித்த செய்திகளை சேகரிக்க விரும்புவோர் இலங்கை அரசின் செய்திப்பிரிவின் அனுமதியுடன்தான் அதைச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கை கூறுவதாவது...
அங்கீகாரம் பெற்ற சர்வதேச பத்திரிக்கையாளர்கள், கொழும்புக்கு வரும்போது, அவர்களுக்கு விசா ஆன் அரைவல் மூலம் செய்தி சேகரிக்க விசா வழங்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மட்டுமே விசா தரப்படும். புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
நவம்பர் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாநாடு தொடர்பான செய்திகளை தேசிய மற்றும் சர்வதேச செய்தியாளர்கள் சேகரிக்கலாம்.
காமன்வெல்த் தொடர்பில்லாத செய்திகளையும் சேகரிக்க சர்வதேச செய்தியாளர்களுக்கு அனுமதி தரப்படும். ஆனால், அவர்கள் அதுதொடர்பான முன் அனுமதியை இலங்கை அரசின் மீடியா மற்றும் செய்தித் தொடர்பு அமைச்சகத்தின் அனுமதி வழங்கும் பிரிவிடம் பெற வேண்டும். அனுமதி பெற்று அவர்கள் செய்தி சேகரிக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை அமைச்சகமே செய்து தரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் சர்வதேச செய்தியாளர்களின் கவனம் முழுவதும் தமிழர் பிரச்சினை மீதுதான் இருக்கிறது என்பது உலகறிந்த விஷயம். எனவே மாநாட்டுக்கு வரும் வேளையில், அப்படியே தமிழர்கள் அவலம் தொடர்பான செய்திகளையும், கட்டுரைகளையும் சர்வதேச மீடியாக்கள் வெளியுலகுக்கு வெளியிட்டு விட்டால் தங்களது நிலை சிக்கலாகி விடும் என்பதால்தான் இப்படி ஒரு கட்டுப்பாட்டை போட்டுள்ளது இலங்கை அரசு.
இதன் மூலம் இதை மீறி எந்தப் பத்திரிக்கையாளராவது செய்தி சேகரித்தால் அவர்களை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது, பிடித்து வைப்பது, விசாரிப்பது என குடைச்சல் தரலாம் இலங்கை என்று எதிர்பார்க்கப்படுகிறது.