மீனவர் தூக்கு வழக்கு செலவுக்கு தமிழக அரசு ரூ20 லட்சம் உதவி- திங்களன்று மேல்முறையீடு!!
சென்னை/ கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கின் செலவுக்காக தமிழக அரசு ரூ20 லட்சம் உதவி வழங்கியுள்ளது. இந்த வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் திங்களன்று மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், லாங்லெட், பிரசாத் ஆகிய 5 மீனவர்களும் போதை பொருள் கடத்தியதாக இலங்கை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதையடுத்து மத்திய அரசு சார்பில் 5 மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யக் கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் இலங்கையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி 2 நாட்கள் விடுமுறை காரணமாக மனுதாக்கல் செய்ய முடியவில்லை.
நாளை மறுநாள் 10-ந்தேதி மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக அரசு ரூ20 லட்சம் உதவி
இதனிடையே தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 மீனவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் செலவுக்கு ரூ20 லட்சம் நிதியை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே இந்த 5 மீன்வர்கள் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ7,500 உதவித் தொகையை வழங்கி வருகிறோம் என்று கூறியுள்ளார்.