தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ் மீனவர்களைச் சந்தித்தார் இந்திய தூதர்!
கொழும்பு: இலங்கை உயர்நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும், இந்திய தூதர் சின்கா செவ்வாய்கிழமை கொழும்பு வெளிக்கடை சிறைச்சாலையில் சந்தித்துப் பேசினார்.
கடந்த 2011 நவம்பர் 28-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லாங்நெட் ஆகிய ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தனர்.
பின்னர் இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்து மீனவர்களை சிறையில் அடைத்தனர்.
இதனைkd கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் வாயிலாக. அப்பாவி மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதை உணர்ந்த தமிழக அரசு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் 5 மீனவர்களுக்கான வழக்கை நடத்தி வந்தது.
கடந்த வியாழக்கிழமை மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு வெளிக்கடை சிறைச்சாலையில் தூக்கு தண்டனை கைதிகளுக்கான தனிச்சிறையில் தமிழக மீனவர்கள் 5 பேரையும் இலங்கைக்கான இந்திய தூதர் ஓ.கே.சின்கா செவ்வாய்கிழமை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்கா, தமிழக மீனவர்கள் 5 பேரை விடுவிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.
சிறையில் உள்ள மீனவர்கள் தங்கள் உறவினர்களுடன் பேச செல்போன் வசதியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.