அமெரிக்காவின் தீர்மானத்திற்கு நட்பு நாடுகளுடன் சேர்ந்து பதில் தீர்மானம்- இலங்கை
கொழும்பு: ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் எங்களுக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள தீர்மானத்திற்கு பதில் தரும் வகையில் எங்களது நட்பு நாடுகளுடன் இணைந்து பதில் தீர்மானத்தைக் கொண்டு வருவோம் என்று இலங்கை கூறியுள்ளது.
சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட தனது நட்பு நாடுகளுடன் இணைந்து இந்தத் தீர்மானத்தை இலங்கை தயார் செய்துள்ளதாம்.
இதுகுறித்து இலங்கையின் செய்தி்த் தொடர்புத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்லா கூறுகையில், எங்களது நட்பு நாடுகளின் தீர்மானம் அமெரிக்காவுக்கு பதிலடியாக இருக்கும். எந்தெந்த நாடுகள் என்ற விவரத்தை இப்போது தெரிவிக்க இயலாது.
எங்களது நாட்டில் இறுதிப் போரின்போது நடந்தவை குறித்து நாங்களே உண்மையாக, நேர்மையாக விசாரணை நடத்தியுள்ளோம். தொடர்ந்தும் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை எடுத்து வருகிறோம். இந்த நிலையில் இதுகுறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை. ஆனால் அதைச் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துவது அவசியமற்றது.
இந்தக் கோரிக்கையுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வருகிறது அமெரிக்கா. இதை எதிர்த்து பதில் தரும் வகையில் எங்களது தீர்மானம் தாக்கலாகும் என்றார் அவர்.
சில இஸ்லாமிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளையும் தனக்கு ஆதரவாக அணி திரட்டி வருகிறது இலங்கை என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை இதுவரை தெரியவில்லை. இருப்பினும் இதற்கு முன்பு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோதெல்லாம் இந்தியா அதை எதிர்த்தே நடந்து கொண்டுள்ளது. ஆனால் எதிர்ப்பு தெரிவித்த பிறகு அது இலங்கையை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.