சட்டவிரோத பண பரிவர்த்தனை... ராஜபக்சேயின் மூத்த மகன் நமல் மீண்டும் கைது
கொழும்பு: சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மூத்த மகன் நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் அதிபராக 10 ஆண்டு காலம் பதவி வகித்தவர் ராஜபக்சே. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இவர் பதவி விலகினார்.
இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அவரது குடும்பத்தினர் செய்த முறைகேடுகள் குறித்து பல்வேறு புகார்கள் குவிந்தன.
ராஜபக்சேயின் மூத்த மகனான நமல் ராஜபக்சே மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இரண்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததில் நடந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை பற்றி நிதி குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக நேற்று நமலை நிதி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
நமல் கைது செய்யப்படுவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே, அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ரூ. 4,225 கோடி நிதி முறைகேடு செய்ததாக கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார். 7 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
நமலின் இந்த திடீர் கைது குறித்து ராஜபக்சேவின் குடும்பத்தார் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
நமலைப் போலவே ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சேவும் இதுவரை 3 தடவை கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், தொடர்ந்து அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.