மும்பை 26/11 பாணியில் நடந்த தாக்குதல்.. இலங்கையில் அடுத்தடுத்த குண்டுவெடிப்பு.. எதிர்பாராத அட்டாக்!
இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் அப்படியே மும்பையில் 2008ல் நடத்தப்பட்ட தாக்குதல் போலவே நிகழ்ந்து உள்ளது.
Recommended Video
கொழும்பு: இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் அப்படியே மும்பையில் 2008ல் நடத்தப்பட்ட தாக்குதல் போலவே நிகழ்ந்து உள்ளது.
இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 3 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது.
இந்த குண்டுவெடிப்பில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது. இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இலங்கை குண்டு வெடிப்பின் பின்னணியில் யார்?
எங்கு ஆரம்பித்தது
முதலில் இலங்கையில் உள்ள தேவாலயங்களில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச்சில்தான் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அங்கு அப்போது தேவாலயத்தில் மக்கள் ஈஸ்டர் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள்.
அடுத்து என்ன
இந்த சர்ச்சில் இருந்து பெரிய அளவில் சத்தம் கேட்டு அங்கு போலீசார் வந்தனர். அந்த நொடியில் அடுத்து இரண்டு சர்ச்சுகளில் குண்டு வெடித்தது. கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. இங்கும் மக்கள் ஈஸ்டர் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
மக்கள் வெளியேற்றம்
சர்ச்சுகள் குறி வைத்துக் தாக்கப்படுகிறது என்று கருதப்பட்ட நிலையில் போலீசார் துரிதமாக செயல்பட தொடங்கினார்கள். வேகமாக அனைத்து சர்ச்சுகளில் இருந்தும் மக்களை வெளியேற்ற ஆணையிட்டார்கள். அதன்படி சர்ச்சுகளில் இருந்து மக்கள் படுவேகமாக வெளியேறினார்கள்.
எதிர்பார்க்கவில்லை
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இதில் 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மும்பை ஸ்டைல்
மொத்தம் ஆறு இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் மொத்தமும் மும்பையில் 2008ல் நடந்த 26/11 ஸ்டைல் தாக்குதல் போல நடந்து இருக்கிறது. அங்கும் இப்படித்தான் வரிசையாக அடுத்தடுத்த இடங்களில் எதிர்பாராத தாக்குதல் நடந்தது. நட்சத்திர ஹோட்டல்கள் குறி வைக்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் இலங்கையில் நேரடியாக துப்பாக்கிகள் மூலம் தாக்காமல் குண்டுகள் மூலம் தாக்கி இருக்கிறார்கள்.
யார் பொறுப்பு
ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இப்போதே இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 160ஐ தாண்டிவிட்டது. இது தொடர்பான விசாரணையை இலங்கை அரசு முடுக்கிவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.