இலங்கை போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானது தமிழர்களுக்கல்ல... சொல்கிறார் ராஜபக்சே
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில் ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது. அப்போது, இலங்கை போர்க்குற்றம் தவிர இலங்கையில் நடைபெற்று வருவதாக கூறப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் கலே நகரில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே. அப்போது அவர் இலங்கை போர் குறித்தும் சிறுபான்மையினர் மீதான அத்துமீறல் குற்றச்சாட்டு குறித்தும் பேசினார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விடுதலைப் புலிகளை எதிர்த்து...
விடுதலைப் புலிகள் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பை எதிர்த்தே இலங்கையில் போர் நடத்தப்பட்டது. போரின் இலக்கு தமிழார்கள் அல்ல.
எப்படி இது சாத்தியம்..?
தமிழ் மக்களுக்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு உண்மையானது என்றால் இலங்கையின் தெற்கே சிங்களவர் மத்தியில் தமிழர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்களே அது எப்படி சாத்தியமாகும்.
மறுப்பு...
இலங்கையில், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. சில வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இலங்கை மீது அவதூறு பரப்பி வருகின்றன.
இலங்கைக்கு களங்கம்...
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது மாதிரியான பிரச்சாரங்களை பரப்பி சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கலங்கம் விளைவிக்கும் முயற்சி நடைபெறுகிறது' என இவ்வாறு அவர் பேசினார்.