விசா மறுத்தாலும் ஐ.நாவின் இலங்கைவிசாரணை நிறுத்தப்பட மாட்டாது... நவிபிள்ளை திட்டவட்டம்
கொழும்பு: இலங்கை அரசு விசா வழங்க மறுத்தாலும் கூட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை.
போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளூர் விசாரணைகளே போதுமானது எனக் கூறி ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு இலங்கைக்கு வர விசா வழங்கப்பட மாட்டாது என நேற்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளையிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், ‘இலங்கைக்குள் செல்ல தமது குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், இணையத்தள வசதிகளுடனும் செய்மதி வசதிகளுடனும் விசாரணைகளை நம்பகத்தன்மையுடன் முன்னெடுக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிரியாவில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும், அந்த நாட்டில் முறையான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்க முடிந்ததை முன்னுதாரணமாக நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டினார்.