இலங்கையில் தெரிகிறது நம்பிக்கையின் ஒளி.. தமிழர் நிலங்களை திருப்பி தர புதிய அரசு முடிவு!
கொழும்பு: இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சே படுதோல்வியடைந்தார். ராஜபக்சேக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு, தமிழர்களின் வாக்குகளே முக்கிய பங்கு வகித்தது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது.
புதிய அதிபர் சிறிசேனா தனது அதிரடி வேட்டைகளை பதவியேற்ற மறுநாள் முதலே தொடங்கிவிட்டார். ராஜபக்சே காலத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களை பதவியில் இருந்து விலகுமாறு நேற்று சிறிசேன உத்தரவிட்டதன்மூலம், ராஜபக்சேயின் ஆதரவாளர்கள் அனைவரையும் களை எடுக்கும் பணியை தொடங்கி விட்டார்.
இதற்கிடையே வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் ஈழ தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் சிறிசேனா ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. தனது வெற்றியை தமிழர்கள்தான் உறுதி செய்தனர் என்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை சிறிசேனா தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கவர்னர்கள் மாற்றம்
முதல்கட்டமாக ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளை ஆய்வு செய்ய தனிக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடகிழக்கு மாகாணங்களின் கவர்னர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவும் சிறிசேனா சம்மதித்துள்ளார்.
முதல்வர் விக்னேஸ்வரனுக்கு முட்டுகட்டை
2009ல் போர் முடிந்த பிறகு வடக்கு மாகாண கவர்னராக ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் சந்திரஸ்ரீயை, ராஜபக்சே நியமனம் செய்திருந்தார். இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு பல வகையிலும் முட்டுக்கட்டை போட்டுவந்தார். தமிழரும், வடக்கு மாகாணத்தின் முதல்வருமான, விக்னேஸ்வரனை செயல்படவிடாதபடி ஆளுநர் தனது நெருக்கடியை காண்பித்து வந்தார்.
அதிரடி நிச்சயம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் செய்யப்படும் நிதி ஒதுக்கீடுகளையும் தடுத்து நிறுத்தி மக்களுக்கு உரிய பலன் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார். எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, சிறிசேனா விரைவில், வடக்கு மாகாண ஆளுநரை மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பாலச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
1 லட்சம் ஏக்கரும் உங்களுக்குத்தான்..
இந்த நிலையில் தமிழர்களுக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கர் நிலத்தை அவர்களிடமே ராணுவம் திரும்ப ஒப்படைக்கும் என்று, ஈழ தமிழர்கள் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தகவலை, முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன் சேகா வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சரத் பொன்சேகா கூறுகையில், ‘‘2009ல் போர் நடந்த சமயத்தில் ராணுவத்தை நகர்த்த இடம் தேவைப்பட்டது. எனவே தமிழர்களின் நிலம் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தற்போது சூழ்நிலை மாறி விட்டதால், தமிழர்களின் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்'' என்றார்.
ராணுவம் முழுவதும் அகலாது
ஈழ தமிழர்களின் மற்றொரு முக்கிய கோரிக்கை, தங்கள் பகுதியில் அளவுக்கு அதிகமாக உள்ள ராணுவ வீரர்களை அகற்ற வேண்டும் என்பதாகும். இது தொடர்பாகவும் சிறிசேனா பரிசீலினை செய்து வருகிறார். வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற மாட்டேன் என்று சிறிசேனா தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருந்தார். எனவே வடக்கில் உள்ள ராணுவம் முழுமையாக விலகாது என்பது உறுதியாகி உள்ளது.
ராணுவ கெடுபிடி குறையும்
என்றாலும் தமிழர்களை திருப்திப்படுத்தும் வகையில் வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் ராணுவம் வேறு இடத்துக்கு நகர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தமிழர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தின் பலம் குறைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சிறிசேனா அரசின் இந்த நடவடிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.