தமிழர்கள் தடுத்து வைப்பா? வவுனியா ராணுவ முகாமுக்குள் நுழைந்து ஐ.நா சிறப்பு அதிகாரி அதிரடி சோதனை
வவுனியா: இலங்கை வருகை தந்த ஐநா சிறப்பு அதிகாரி ஜூவான் மென்டஸ் அதிரடியாக ராணுவ முகாமுக்குள் நுழைந்து தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? என சோதனை நடத்தினார்.
வவுனியாவில் இலங்கை ராணுவப் படைகளின் தலைமையகமாக இயங்குவது ஜோசப் படை முகாம். இங்கு தமிழர்கள் ரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒரு சித்திரவதை முகாமாக இயங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டை ஐ.நா நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த யஸ்மின் சூகாவும் அண்மையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை வந்துள்ள சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படுதல் மற்றும் தண்டிக்கப்படுதல் தொடர்பான ஐ.நா. சிறப்பு அதிகாரி ஜுவான் மென்டஸ் சர்ச்சைக்குரிய ஜோசப் இராணுவ முகாமில் சோதனைகளை நடத்தியிருக்கிறார்.
ஜுவான் மென்டஸ் கடந்த மாதம் 29-ந் தேதி முதல் இலங்கையில் முகாமிட்டு விசாரணைகளை நடத்தி வருகிறார்.