பூட்டிய அறைக்குள் 18 நாட்கள்... நலமுடன் மீட்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுமி.. அழுது நெகிழ்ந்த மீட்புபடை..!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் காணாமல் போய் 18 நாட்கள் கழித்து பூட்டிய அறைக்குள் இருந்து 4 வயது சிறுமி ஒருவர் நலமுடன் மீட்கப்பட்டுள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் இருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை சுற்றுலா தலம் ஒன்றில், கடந்த அக்டோபர் 16-ம் தேதி இரவு கிளியோ ஸ்மித் என்ற 4 வயது சிறுமி தனது தாய் எல்லி மற்றும் சகோதரியுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 1.30 மணியளவில் கூடாரத்திலிருந்து சிறுமி கிளியோ ஸ்மித் காணாமல் போனார்.
இது குறித்து அவரது தாய் போலீஸில் அளித்த புகாரின் பேரில், சிறுமி கிளியோ ஸ்மித்தை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. சிறுமியை மீட்பதற்காக 100 பேர் கொண்ட தனி மீட்புப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடந்தது. சிறுமியை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் சன்மானமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எப்பாடுபட்டேனும் சிறுமியை மீட்டுவிட வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்ற போலீஸார், நேரம் காலம் பார்க்காமல் தங்கள் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். நாட்கள் செல்ல செல்ல காணாமல் போன சிறுமி உயிருடன் மீட்கப்படுவாரா என்ற ஐயம் கூட பல இடங்களில் எழுந்தது.
இந்நிலையில் சிறுமி காணாமல் போன இடத்திலிருந்து வெறும் 6 நிமிடத்தில் பயணிக்கக்கூடிய கர்னர்வோன் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி இருக்கலாம் என போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று அதிகாலை அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தியது தேடுதல் குழு.
அதில் ஒரு அறை பூட்டப்பட்டிருந்த நிலையில், அதை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தேடப்பட்ட 4 வயது சிறுமி கிளியோ ஸ்மித் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர், சிறுமியிடம் உன் பெயர் என்ன என வினவிய போது, என் பெயர் கிளியோ என மழலைக் குரலில் கூறியிருக்கிறார் அந்தச் சிறுமி.
இந்த நிகழ்வு தேடுதல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் கண்களில் கண்ணீரை வரவைத்தது. இதையடுத்து சிறுமி நலமுடன் இருப்பதை உறுதி செய்த போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்து அந்த புகைப்படத்தை வெளியிட்டனர்.
இதனிடையே தனது குடும்பம் மீண்டும் முழுமை பெற்றுள்ளதாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார் சிறுமி கிளியோவின் தாய் எல்லி. இதேபோல் மாகாண பிரதமர் மார்க் மெக்கவன் இது குறித்து கூறுகையில், புதன்கிழமை அதிகாலை தனது தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் உறக்கத்தில் இருந்த காரணத்தால் அந்த அழைப்பை தாம் ஏற்கவில்லை என்றும், கடைசியில் பார்த்தால் சிறுமி மீட்கப்பட்ட தகவலும் அந்தச் சிறுமியின் அழகான படமும் தனக்கு கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தார்.
18 நாட்களுளாக சிறுமி கிடைப்பாரா, கிடைத்தாலும் நலமுடன் இருப்பாரா என பல்வேறு ஐயங்களும், விவாதங்களும் மேற்கு ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த நிலையில், பிரார்தனைகளுக்கு பலன் கிடைத்திருப்பதாக கூறுகின்றனர் கர்னர்வோன் மக்கள். சிறுமி காணாமல் போன விவகாரத்தில் 36 வயது இளைஞரை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்ல முயற்சி.. சென்னையில் அடுத்தடுத்து நடக்க போகும் 2 விஷயங்கள்.. ககன்தீப் சிங் பேடி உத்தரவு