கொரோனா தடுப்பூசிக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்..கனடா முதல் ஆஸ்திரேலியா வரை.. ஸ்தம்பித்த நகரங்கள்
சிட்னி : கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனடா உள்ளிட்ட நாடுகளின் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியாவிலும் தடுப்பூசிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பையும் அரசியல் ஸ்திரத் தன்மை அற்ற சூழ்நிலையும் உருவாக்கியது கொரோனா வைரஸ். 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது.
அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த வைரஸ் இந்த ஆண்டு மீண்டும் ஆட்டத்தை துவக்கிய நிலையில் தற்போது சற்றே அடங்கியுள்ளது. தற்போது ஓமிக்ரான் என்ற பெயரில் பல நாடுகளில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா அரசை திணறடிக்கும் டிரக் ஓட்டுநர்கள்.. குறிவைக்கப்படும் ஜஸ்டின் ட்ரூடோ? இனி அவ்வளவு தானா
கொரோனா தடுப்பூசி
மருத்துவ கட்டமைப்புகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை உலக நாடுகள் செலவு செய்து தங்கள் மக்களுக்காக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும் தற்போது தடுப்பூசி வழங்குவதற்காகவும் ஒரு கணிசமான தொகையை செலவு செய்து வருகின்றன உலக நாடுகள். தடுப்பூசி தான் மக்களை காக்கும் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடும் கட்டுப்பாடுகள்
இந்தியாவில் இதுவரை 1,72,81,49,447 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக சிலர் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். இதையடுத்து தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்குத்தான் பொது இடங்களில் அனுமதி, பயணம் மேற்கொள்ள அனுமதி உள்ளிட்ட பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கி உள்ளன.
கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளில் பொது மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எல்லை தாண்டிச் செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற கனடா அரசின் தடையை எதிர்த்து இரண்டு வாரங்களாக லாரி ஓட்டுனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் கனடாவே ஸ்தம்பித்துப் போயுள்ளது. மேலும் இந்த போராட்டம் கனடாவுடன் ஓயாமல் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. கனடாவையடுத்து நியூசிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நாளுக்கு நாள் வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் போராட்டம்
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கன்பெரா நகரில் தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கான்பரா வீதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராகவும் முழங்கி வருகின்றனர். மக்களுக்கு போராட்டம் நடத்த உரிமையுள்ளது என கூறியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அமைதியான முறையில் போராட்டங்களில் மக்கள் முன்எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.