நெல்லை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 2 குழந்தைகள் 3 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாப சாவு
நெல்லை: நெல்லை அருகே தனியார் பஸ் சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லை-நாகர்கோயில் ஹைவேயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
வேளாங்கன்னியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி நேற்று இரவு யுனிவர்சல் நிறுவனத்தின் தனியார் மல்டி ஆக்சில் சொகுசு பஸ் கிளம்பியது. அதில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக பயணித்தனர்.
இன்று அதிகாலை அந்த பஸ், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அடுத்த பனகுடி அருகில் பிலாக்கொட்டை பகுதியில், வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்தது.
இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த 10 பேர் பலியாயினர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஜெனி, எட்வின், அஞ்சலி, சிஜி, ஆண்டியோ உட்பட 2 குழந்தைகள் 3பெண்கள், 5ஆண்கள் என மொத்தம், 10 போர் உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் கருணாகரன், நெல்லை சரக டிஐஜி அன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.
டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் பஸ்சின் இடதுபக்கம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. டயரும் வெடித்துள்ளது. அதேநேரம் வலது பக்க கண்ணாடிகள் உடையவில்லை. இடதுபக்கமாக பஸ் இடித்ததுதான் இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால், நெல்லை-நாகர்கோயில் நடுவேயான 4வழி சாலையில் பல மணிநேரத்திற்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
பஸ் டிரைவர் ஜான் பாஸ்கோ (39), கால் முறிந்த நிலையில், நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். முன்னால் சென்ற லாரியை முந்திய செல்ல முயன்றபோது, பஸ் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனிடையே, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து, ஆம்புலன்ஸ்சுகள், செவிலியர்களை அம்மாநில முதல்வர் அனுப்பினார்.