1030வது சதய விழா: மாமன்னன் ராஜராஜனுக்கு மாலை அணிவிக்க போட்டா போட்டி
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1030-வது சதய விழாவின் 2ம் நாளான வெள்ளிக்கிழமை ராஜராஜனின் சிலைக்கு 25க்கும் அதிகமான அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலைகள் அணிவித்தனர். ராஜராஜனை சாதியரீயாக அணுகுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
உலக புகழ் பெற்று விளங்கும் பெரிய கோயிலை கட்டிய பேரரசர் ராஜராஜ சோழன் பிறந்த நாளை, சதய விழாவாகக் கொண்டாடுகிறது தமிழக அரசு. அவருடைய நட்சத்திரம் சதயம். அதனால் சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1030வது சதயவிழா வியாழக்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை யானை மீது திருமுறை வீதி உலா நடைபெற்றது.
பெரியகோவிலில் உள்ள பெருவுடையார், பெரியநாயகிக்கு பால், தேன், நெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், வாசனைப் பொடி, திரவியப் பொடி, சாம்பிராணி தைலம், தைலக்காப்பு, விபூதி, பசுந்தயிர், சந்தனம், பன்னீர், பல்வேறு பச்சை இலைகள் என 48 வகையான அபிஷேகங்களும், பிற்பகலில் பெருந்தீப வழிபாடும் நடைபெற்றன. தொடர்ந்து, பெரியகோயில் அருகே பூங்காவில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சாவூர் ஆட்சியர் என். சுப்பையன் மாலை அணிவித்தார்.
இந்நிலையில், மள்ளர் மீட்பு களம், முக்குலத்து புலிகள் அமைப்பினர், அகில இந்திய முக்குலத்தோர் அமைப்பு, முக்குலத்தோர் பேரியக்கம், இந்து இளைஞர் எழுச்சி பேரியக்கம், இந்து மக்கள் கட்சி, தேவேந்திர குல வேளாளர் பேரியக்கம், முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை, பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவினர், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட 29 அமைப்புகளுக்கு மேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாமன்னன் ராஜராஜ சோழன், பல பட்டங்களை பெற்றவர். கங்கைகொண்டான், வெற்றிக்கொண்டான், கடாரங்கொண்டான் என்னும் பட்டங்களை பெற்றவர். அப்படித்தான் பெருஆவுடையார் என்றும், பெரும் தச்சனார் என்றும் பெயர் பெற்றார். இதை வைத்துக்கொண்டு ராஜராஜன் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு படைகளை திரட்டி மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகின்றனர்.
இதனிடையே, விடுதலை தமிழ்புலிகள் கட்சியினர் ராஜராஜன் சிலையை கோயில் வளாகத்திற்குள் வைக்க வேண்டும் எனும் கோரிக்கையை வைத்து முற்றுகை போராட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ராஜராஜன் ஒரு தமிழர் என்கிற மனப்பான்மையுடன் அனைவரும் பார்க்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மாமன்னன் ராஜராஜனின் வரலாற்றை, புகழை நாம் பரப்ப வேண்டும். கட்டட கலையில் சிறந்து விளங்கிய ராஜராஜனை சாதி சாயம் பூசி ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டுபோய் நிறுத்தி விடக்கூடாது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சாதிய அமைப்புகள் தங்களுடைய சமூதாயத்தை சேர்ந்தவர் என்று சொல்லி ஊர்வலம் நடத்துவதை அரசு தடைசெய்ய வேண்டும்.
இப்படி சாதி சாயம் பூசப்படுவதால், புகழ்பெற்ற ராஜராஜன் பிறந்த தினமாக கொண்டாடும் சதயவிழா திருநாளில் சாதிய கலவரங்களாக வெடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை இப்போதே தடுத்து நிறுத்த அரசு, சதயவிழாவை அரசு விழாவாகவும், ஆன்மீக விழாவாகவும் நடத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.