மு.க.அழகிரியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 பேர் திமுகவிலிருந்து சஸ்பென்ட்
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக தேனி மாவட்ட நிர்வாகிகள் 12 பேரை அக்கட்சி சஸ்பென்ட் செய்துள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.டி.டி.இளங்கோவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.டி.செல்லப்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பி.சண்முகம், மக்களவை முன்னாள் உறுப்பினர் ஆர்.ஞானகுருசாமி, உத்தமபாளையம் ஒன்றியச் செயலாளர் க.முல்லைசேகர், உத்தமபாளையம் பேரூர் செயலாளர் எம்.ஜெய்லானி, துணைச் செயலாளர் எஸ்.செல்லையா, பெரியகுளம் நகர துணைச் செயலாளர் எம்.பாயும்புலி ராசு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எம்.வீரராகவன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கே.கே.குமார். உத்தமபாளையம் எஸ்.எம்.எம்.காசிம், எஸ்.சண்முகம் ஆகியோர் திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தாற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் மு.க.அழகிரி, தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு காதணி விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 12 நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதனால் அவர்கள் அனைவரும் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மு.க.அழகிரியைச் சந்திக்கவோ, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திமுகவினர் கலந்துகொள்ளவோ கூடாது என்று திமுக தலைமை ஏற்கெனவே எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.