பா.ஜ.கவிடம் 12 தொகுதிகள் கேட்டிருக்கிறோம்: வைகோ
சென்னை: லோக் சபா தொகுதியில் தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தையின் போது பாஜக தலைமைக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை, மாறாக 12 தொகுதிகளை கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம் என்று வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க.வின் மறுமலர்ச்சி இலக்கிய பேரவை சார்பில் 3 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பொருளாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார்.
விழாவில் தமிழ்மறவன் எழுதிய "அரசியலில் வைகோ ஓர் அதிசயம்" என்ற நூலை வைகோ வெளியிட தேவதாஸ் பெற்றுக்கொண்டார். ஆ.வந்தியத்தேவன் எழுதிய "பெரியாரின் போர்வாள் அண்ணா" என்ற நூலை குமாரி விஜயாகுமார் வெளியிட இமயம் ஜெயராஜ் பெற்றுக்கொண்டார். கவிஞர் மணிவேந்தன் எழுதிய "நம்மால் விடியும்" நூலை மல்லை சத்யா வெளியிட செந்திலதிபன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட வைகோ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
12 தொகுதிகளுக்கு கடிதம்
கேள்வி:- பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறீர்கள்.
பதில்:- 12 தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாரதீய ஜனதா கட்சி தலைமைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. பிறகட்சிகள் போன்று வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தப்பட்டோ, வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டோ கூட்டணி கட்சி தலைமைக்கு நெருக்கடி எதுவும் தரப்படவில்லை.
விருதுநகரில் போட்டி
கேள்வி: நீங்கள் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறீர்களா?
நான் போட்டியிடும் தொகுதி குறித்தும் அதிகாரபூர்வ அறிவிப்பும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முறையாக அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.
நரேந்திர மோடியின் நேர்மை
கேள்வி:- பாரதீய ஜனதாவின் எந்த கொள்கையால் ஈர்க்கப்பட்டு, கூட்டணியில் சேர்ந்தீர்கள்?
பதில்:- இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் வாஜ்பாய் போன்று, மோடியும் நல்ல நடவடிக்கைகள் எடுப்பார் என்ற கொள்கையால் கூட்டணியில் சேர்ந்தோம். நரேந்திரமோடி நேர்மையானவர், சமூகநீதி கொள்கையில் ஈடுபாடு உடையவர் என்பதால் சமூகநீதியை காப்பாற்றுவார். மதசார்பற்ற கொள்கையில் அசைக்க முடியாத கொள்கை கொண்டவர் என்பதால் சிறுபான்மையினருக்கு எந்த துன்பமும் நேராது.
முதல்வரின் முடிவு
கேள்வி:- லோக்சபா தேர்தல் தொடர்பாக தமிழக முதல்வர் பேசிய 4 பொதுக்கூட்டங்களிலும், பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை பற்றி குறை கூறாதது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரகூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார் என்பது தெரிகிறது. நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்பதால் தேர்தலுக்கு பிறகு ஏற்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் கவனமாக காய்களை நகர்த்துவதாக நினைக்கிறேன்.