122 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் எங்களுக்குத்தான்... சொல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
பெரும்பான்மையான சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவோடு தமிழக அரசு உறுதியோடு சிறப்பாக செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: 122 சட்டசபை உறுப்பினர்களுடன் தமிழக அரசு வலுவாகவும், உறுதியோடும் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். விழா முடிந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியரசுத்தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து தற்போது வரை முடிவு எடுக்கவில்லை. கால்நடை சந்தை கட்டுப்பாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் அறிக்கை கிடைத்த பிறகு தமிழக அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரிக்கை வைத்தோம். மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும். மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு வலிமையாகவும். உறுதியோடும் உள்ளது. 122 எம்எல்ஏக்கள் ஆதரவோடு தமிழக அரசு வலுவாக உள்ளது. திட்டங்கள் சிறப்பாக செயல்படவில்லை என சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு குறைந்து வருகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.