சிறையில் கொடுமையை அனுபவித்தோம் - சென்னை திரும்பிய தமிழக மீனவர்கள் கண்ணீர்
ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்.
சென்னை: ஈரான் சிறையில் 6 மாதம் கொடுமையை அனுபவித்த தமிழக மீனவர்கள் அங்கிருந்து விடுதலையாகி தமிழகம் திரும்பினர். சிறையில் எங்களுக்கு தண்ணீர், உணவு கூட தரவில்லை என்று அவர்கள் கண்ணீருடன் கூறினர்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 15 பேர் மீன்பிடி தொழிலாளர்களாக துபாய் சென்றனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராமகிருஷ்ணன், கண்ணன், முனுசாமி, பாண்டி, சின்னையா, ராசு, மற்றொரு கண்ணன், தங்கசெல்வம், லிங்கேஸ்வரன், பாலமுருகன், ராஜேந்திரன், மரியச்செல்வம், குப்புசாமி, லூயிஸ், நந்து குமார் ஆகிய 15 பேர் கடந்த ஆண்டு துபாய்க்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றனர்.
அங்கு தனியார் நிறுவனம் மூலம் கடலில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமிழக மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி ஈரான் கடற்படை அவர்களை கைது செய்தது.
அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை கடந்த மே 28ஆம்தேதி ஈரான் விடுதலை செய்தது. அவர்களை துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தது.
தமிழக மீனவர்களும் துபாயில் இருந்து இன்று காலை ஏர்இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
தமிழக எல்லையை தொட்டு விட்ட சந்தோசம் இருந்தாலும் சிறையில் அனுபவித்த கொடுமை அவர்களை பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், எல்லை தாண்டி வந்ததாக கூறி எங்களை கைது செய்த ஈரான் கடற்படை சில நாட்கள் கப்பலிலும், சிறையிலும் அடைத்தனர். எங்களுக்கு தண்ணீர், உணவு கூட தரவில்லை என்று கண்ணீர் மல்க கூறினர்.
அதிகாலையில் சென்னை வந்த 13 மீனவர்களையும் அரசு அதிகாரிகள், உறவினர்கள் வரவேற்றனர். 2 மீனவர்கள் மட்டும் ஷார்ஜாவில் இருந்து நேரிடையாக திருச்சி சென்றடைந்தனர்.