திமுக மாஜி அமைச்சர்களின் சொத்து குவிப்பு-சிறப்பு நீதிமன்றம் அமைக்க 'மக்களின் முதல்வர்' அரசு திட்டம்?
சென்னை: திமுக மாஜி அமைச்சர்கள் மீது தமிழகம் முழுவதும் சொத்துக்குவிப்பு வழக்குகள் மக்களின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் தொடரப்பட்டு இந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தையும் விரைவாக முடிக்க தமிழக அரசு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வராக இருந்த ஒருவர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றதோடு பதவியையும் பறி கொடுத்தது தமிழக அரசியலுக்கு புதிது.
அம்மாவை உள்ளே அனுப்பிட்டாங்களேப்பா... இதுக்கெல்லாம் காரணம் திமுகவினர்தான் என்று பரவலாக பேசப்பட்டாலும் திமுக அமைச்சர்களும் அடுத்தது நாம்தான் என்கிற ரீதியில் ஒருவித பதற்றத்துடனேயே இருக்கின்றனர். காரணம் இல்லாமல் இல்லை.
யார் யார் மீது...?
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தவிர 2006 முதல் 2011 வரை அமைச்சர்களாக இருந்த 18 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் உள்ளன.
துரை முருகன், பொன்முடி, நேரு, ஐ.பெரிய சாமி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்,தங்கம் தென்னரசு, வேலு, கே.பி.பி.சாமி, பரிதி இளம் வழுதி,(தற்போது அதிமுக-வில் இருக்கிறார்) அன்பரசன், சுரேஷ் ராஜன், பொங்கலூர் பழனிச்சாமி, சாத்தூர் ராமச்சந்திரன்,என்,கே.கே.பி, ராஜா, தமிழரசி, பெரிய கருப்பன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர்.
சிறப்பு நீதிமன்றங்களிலும், மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களிலும் விசாரணையில் உள்ள இந்த வழக்குகளில் குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பரிதி இளம் வழுதி
இந்த வழக்குகளில் இருந்து வடுவிக்க கோரி, சில முன்னாள் அமைச்சர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. சிலரது மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் நேருவை, ஊழல் வழக்கில் இருந்து விடுவித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பரிதி இளம் வழுதியை விடுவித்து, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தால், அந்த வழக்குகள் மீதான விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்., முடிக்க வில்லை என்றால், அந்த மாநில தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று, லில்லி தாமஸ் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்த பின், அதன் நகல்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அதை தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு முன், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்ய முடியும்.
அனிதா ராதாகிருஷ்ணன்
அப்படி மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அவரை குறிப்பிட்ட வழக்கில் இருந்து விடுவித்தால், அதனை எதிர்த்து, அரசு தரப்பில் அப்பீல் செய்யப்படும். அது தொடர்பான விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் வரை செல்லலாம்.
தற்போது தொரப்பட்ட ஊழல் வழக்குளில் துரை முருகன்,வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் எம்.எல்.ஏ,க்களாக உள்ளனர். முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2006ல் வழக்கு தொடரப்பட்டது அவரும் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் பல திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தொடரப்பட்டு ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஆகி விட்டன.ஆனால் இந்த வழக்குகளில் இன்னும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை.
துரைமுருகன், பொன்முடி, நேரு, பெரியசாமி
ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுக்கள் மீதான விசாரணையும் பல வழக்குகளில் நிலுவையில் உள்ளது. இதன் அடுத்த கட்டமாக, முன்னாள் திமுக அமைச்சர்கள் உயர்நீதிமன்றத்துக்கு செல்ல முடியும். விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அடுத்தடுத்து செல்ல முடியும்.
இதற்கிடையில் துரைமுருகன், பொன்முடி, நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சுரேஷ் ராஜன் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அதிமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றம் வரை சென்று, பொன்முடி, சுரேஷ் ராஜன் ஆகியோருக்கு எதிரான உத்தரவுகளை பெற்றுள்ளது.
வீரபாண்டி ஆறுமுகம்
மீதமுள்ளவர்கள் மீது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்தால்தான், விசாரணை நீதிமன்றங்களில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்குகளில் விசாரணை தொடங்கும், எனவே அதற்கான நடவடிக்கைகளில், தமிழக லஞ்ச ஒழிப்பு துறையும், சிறப்பு வழக்கறிஞர்களும் துரிதமாக ஈடுபட தொடங்கி விட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்து விட்டார். மற்ற மாஜிக்கள் வழக்கிற்காக குடும்பத்துடன் நீதிமன்ற படியேறிக்கொண்டிருக்கின்றனர்.
சிறப்பு நீதிமன்றம்
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்துக்குக் கொண்டு வந்து சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் யோசனையில் தமிழக அரசு உள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதா உள்ளிட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் மீது வழக்குப் போட்டு அவமானப்படுத்தியதற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாகவே இது பார்க்கப்படுகிறது.ரூ.66 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மாஜி அமைச்சர்கள் எத்தனை கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
விழுப்புரம் பொன்முடி
பொன்முடி மீதும் அவரது மனைவி மீதும் 2003, 2011 ஆம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற படியேறிவருகிறார் பொன்முடி. இதோடு செம்மண் குவாரி முறைகேடு வழக்கும் இவர்மீது தொடரப்பட்டுள்ளது.
கே.என்.நேரு
திருச்சி கே.என்.நேரு, அவரது மனைவி சாந்தா, மகன் அருண் மீது 4 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்தாக திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேரு விடுதலை செய்யப்பட்டார். இதேபோல 2011ஆம் ஆண்டு நேரு மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த இரண்டு வழக்குகளிலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சுரேஷ்ராஜன்
திமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த சுரேஷ்ராஜன், அவரது மனைவி பாரதி, தந்தை நீலகண்ட பிள்ளை, தாய் ராஜம் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. 28 லட்சம் ரூபாய் வருமனத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதேபோல 2012 ஆம் ஆண்டும் 14,82,21,439 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுரேஷ்ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கீதா ஜீவன்
திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன், தந்தை என்.பெரியசாமி, தாயார் எபனேசர், சகோதரர்கள் என்.பி.ராஜா, என்.பி.ஜெகன் ஆகியோர் மீதும் ரூ. 2,31,87,000 சொத்து குவித்ததாக தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
சாத்தூர் ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, உறவினர் டி.கே.எஸ் மூர்த்தி மீது ரூ. 44,00,000 சொத்து சேர்த்ததாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதேபோல முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசும் அவரது மனைவி மணிமேகலையும் 72லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கோர்ட் படியேறும் மாஜிக்கள்
துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரி, எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, என்.கே.கே.பி ராஜா குடும்பத்தினர், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் குடும்பத்தினரும் சொத்துக்குவிப்பு வழக்கை சந்தித்து வரும் மாஜி அமைச்சர்கள் ஆவர்.
தமிழரசி
தமிழகத்தில் கடந்த 2006 - 11 திமுக ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த தமிழரசி. தனது பதவிக் காலத்தில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கிற்காக அவர் மதுரை நீதிமன்ற படியேறிவருகிறார்.
2016 சட்டமன்ற தேர்தலில்
தமிழகம் முழுவதும் பல நீதிமன்றங்களில் நடந்து வரும் இந்த வழக்குகள் அனைத்தையும் மொத்தமாக ஒரே இடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இந்த வழக்குகள் அனைத்தையும் விரைவில் முடிக்க அ.தி.மு.க திட்டமிட்டுள்ளது. எனவே 18 அமைச்சர்களும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ளதால்தான் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் திமுக அடக்கி வாசித்தது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
மத்தியிலும் சிக்கல்
மாநிலத்தில் திமுக மாஜிக்கள் வசமாக சிக்கியுள்ளது போல மத்தியிலும் 2ஜி வழக்கு சூடுபிடித்துள்ளது. இதில் திமுக மாஜிக்களும், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களும் சிக்கியுள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பின் விரைவில் வெளியாகும் சூழ்நிலையில் உள்ளதால் திமுக தரப்பு திகிலடித்து கிடக்கிறது.