செல்போன் நம்பரை கொடுக்காததால் மாணவியை கொன்றேன்: அக்காவின் காதலன் வாக்குமூலம்!
சேலம்: காதலியின் செல்போன் நம்பரை அவரது தங்கை தராததால் கொலை செய்தேன் என்று மாணவியின் அக்காவின் காதலன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் அழாகாபுரன் பெரியபுத்தூர் வன்னியர் நகரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகள் தேஜாஸ்ரீ கடந்த 13ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது மர்மநபர்களால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என தேஜாஸ்ரீயின் குடும்பத்தார் கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள்.
இதற்கிடையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடலை பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு சேலம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இதற்கென தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார்.
ஆரம்பம் முதலே தேஜாஸ்ரீயின் அக்காவான ஹரிணியை காதலித்து வந்த யுகாதித்தனை சந்தேகித்தது காவல்துறை. முதற்கட்டமாக அவரிடம் நடத்திய விசாரணையில் ஹரிணியை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்கள் குடும்பத்தார் பிரித்துவைத்துவிட்டதாகவும் கொலை நடந்த அன்று ஊரில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அதன்பிறகு அவரை காவல்துறையினர் விடுவித்துவிட்டனர்.
ஹரிணியிடம் விசாரித்ததில் திருமணமெல்லாம் நடக்கவில்லை நான் அவனை காதலிக்கவே இல்லையென்று தெரிவித்தார். தேஜாஸ்ரீயின் பள்ளி வேன் டிரைவர் என காவல்துறை பலதரப்பில் விசாரணை நடத்திவந்த போதும் யுகாதித்தனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது காவல்துறை.
செல்போன் சிக்னல், கொலை நடந்த அன்று தேஜாஸ்ரீ வீட்டிற்கு வந்த இரண்டு பேர் ஓட்டிவந்த பல்சர் பைக் இவைகளை குறிவைத்து விசாரணையில் குதித்த காவல்துறை, தேஜாஸ்ரீயை கொலை செய்தது ஹரிணியை காதலித்து வந்த யுகாதித்தன் தான் என்பதை உறுதிப்படுத்தியது.
யுகாதித்தன் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர். யுகாதித்தனும் அவனது நண்பன் சசியும்தான் அந்த கொலையை செய்தது என உறுதியாகவே அவர்களை கைது போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
யுகாதித்தன் தேஜாஸ்ரீயின் அக்கா ஹரிணியை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். ஹரிணி சென்னைக்கு வேலைக்கு சென்றபிறகு ஹரிணியின் போன் நம்பர் வாங்குவதற்காக அவரது வீட்டிற்கு இருவரும் வந்துள்ளனர். அப்போது, வீட்டில் தேஜாஸ்ரீ தனியாக இருந்த சமயம் பார்த்து சென்றிருக்கிறார்.
இருவரும் தேஜஸ்ஸ்ரீயை அவரது சகோதரியின் மொபைல் எண்ணை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். மொபைல் எண்ணை தர தேஜஸ்ஸ்ரீ, மறுத்ததால் அவரை கொலை செய்துள்ளனர்.
கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை புத்தூர் என்ற இடத்தில் போட்டிருப்பதாக, போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்தப்பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்த போது, இருவரும் தப்பியோட முயற்சித்துள்ளனர்.
இதில், அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, சசிகுமாரும், யுக ஆதித்யனும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரையும் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.