10 ஆண்டுகளுக்கு முன் இறந்த தாய்... 2வது முறை இறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்த மயான ஊழியர்கள் சஸ்பெண்ட்
ஈரோடு: பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்த அம்மாவுக்கு, மீண்டும் இறப்பு சான்றுபெற முயற்சித்த குற்றத்திற்காக மயான ஊழியர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிப்பகுதியில் உள்ள கருங்கல்பாளையம், காவிரிக்கரையில் மாநகராட்சி புதைப்பு மற்றும் எரிப்பு மயானம் உள்ளது. இங்கு, காவலராக மூர்த்தி என்பவர் உள்ளார். அதேபோல், இந்த மயானத்தின் முன்னாள் பணியாளரும், தற்போது மாநகராட்சி துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருபவர் மணி.
சமீபத்தில் மணி தனது தாயின் இறப்புச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்துள்ளார். அதனுடன், மயானத்தில் வழங்கிய கடிதத்தை இணைத்து வழங்கியுள்ளார். சந்தேகமடைந்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்திய போது, விண்ணப்பதாரர் மணியின் அம்மா, கடந்த பத்தாண்டுக்கு முன், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இறந்ததும், ஏற்கனவே அதற்காக அங்கே இறப்பு சான்றிதழ் பெற்றதும் தெரியவந்தது.
மணி, மயான காவலர் மூர்த்தியுடன் இணைந்து, போலி ஆவணம் தயாரித்து, தன்னுடைய தாயாருக்கு இறப்பு சான்றிதழ் விண்ணப்பித்தது விசாரணையில் உறுதியானது. ஆனால், எதற்காக மணி தனது தாயின் இறப்புச் சான்றிதழ் வேண்டி இரண்டாவது முறை விண்ணப்பித்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இதனை அடுத்து, மாநகராட்சி ஊழியர்களான, காவலர் மூர்த்தி, துப்புரவு பணியாளர் மணி ஆகிய இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.