மெட்ரோ பணிகள்: சென்னை சென்ட்ரல் எதிரே 200 கடைகள் இடிப்பு- சுரங்க பாதையை மூடவும் முடிவு
சென்னை: மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 200க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அகற்றப்பட்டன.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இருந்த சாலையோர கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 மாதங்களுக்கு முன்பு கடைகளின் உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் வருவாய் துறையினர் கடைகளை அகற்றும் பணிகளில் இன்று ஈடுப்பட்டனர். ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு அங்கு இருந்த கடைகளை தரைமட்டமாக்கினர்.
இதனால் இப்பகுதியில் பல ஆண்டுகளாக கடைகளை நடத்திவரும் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முறையாக வரி செலுத்தி வருவதாகவும், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே மெட்ரோ ரயில் பாதை பணிக்காக பூங்கா மூர் மார்க்கெட் இடையே உள்ள சுரங்க பாதையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுரங்க பாதை மூடப்பட்டால் முறையான மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் பயணிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பூங்கா ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்க பாதையை நாள் தோறும் சுமார் 1 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். மாற்று பாதை அமைக்காமல் சுரங்க பாதை மூடப்பட்டால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.